பிரான்ஸ்: அல்லாஹு அக்பர் என்று கூறி 2 பெண்களை குத்திக் கொன்ற நபர் சுட்டுக் கொலை
மார்செய்ல்: பிரான்ஸில் உள்ள மார்செய்ல் ரயில் நிலையத்தில் ஒருவர் இரண்டு இளம் பெண்களை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
பிரான்ஸில் உள்ள மார்செய்ல் மெயின் ரயில் நிலையத்திற்கு வந்த ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்களை குத்திக் கொலை செய்தார்.
ஒரு பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்றார். மற்றொரு பெண்ணின் மார்பு மற்றும் வயிற்றில் கத்தியால் குத்திக் கொன்றார். பலியான பெண்களின் வயது 17 மற்றும் 20 ஆகும்.
அந்த நபர் 2 பெண்களை கொலை செய்யும்போது அல்லாஹு அக்பர் என்று கூறியுள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த ராணுவ வீரர் ஒருவர் கொலைகாரனை சுட்டுக் கொன்றார்.
இது தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரான்ஸில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருவதால் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.