கருப்பர் இனக் குழந்தையை கன்னத்தில் பளார் என அறைந்த அமெரிக்கருக்கு 8 மாத சிறை
அட்லான்டா: ஓடும் விமானத்தில் கதறி அழுத 19 மாதமேயான குழந்தையை கன்னத்தில் பளார் என அறைந்து விட்டார் ஒரு அமெரிக்கர். அவர் அறைந்தது கருப்பர் இனக் குழந்தை என்பதால் இனவெறி வழக்குப் போடப்பட்டு தற்போது அந்த அமெரிக்கருக்கு 8 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நபரின் பெயர் ஜோ ரிக்கி ஹன்ட்லி. இவர் கடந்த அக்டோபர் மாதம் விமானத்தில் பயணித்தார். விமானம் அட்லான்டா நோக்கி வந்து கொண்டிருந்தது.
விமானத்தில் பயணித்த ஒரு கருப்பர் இன தம்பதியின் கையில் இருந்த 19 மாதக் குழந்தை பயணித்தின்போது வீறிட்டழுதுள்ளது. இதைப் பார்த்து எரிச்சலடைந்த ஹன்ட்லி, குழந்தையை பளார் என கன்னத்தில் அறைந்து விட்டார். குழந்தையின் கண்ணுக்குக் கீழ் அடித்ததால் குழந்தை வலி தாங்க முடியாமல் மேலும் கதறி அழுதுள்ளது.
இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அட்லான்டாவில் விமானம் தரையிறங்கியதும் ஹன்ட்லி மீது போலீஸில் புகார் தரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் நிறுத்தினர். தனது குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து அவருக்கு 8 மாத தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.
உண்மையில் அரசுத் தரப்பில் இவருக்கு 6 மாத சிறைத் தண்டனைதான் கோரப்பட்டது. ஆனால் இவர் ஏற்கனவே இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களில் அடிக்கடி ஈடுபட்டுள்ளதால் அவருக்கு அதிகபட்சமாக 8 மாத சிறைத் தண்டனை விதித்து விட்டார் நீதிபதி.