இரவு நேரங்களில் ஆழ்துளை கிணறுகள் துயரத்தை தடுக்க... ‘ஜொலிக்கும்’ புதிய திட்டத்துடன் ஜப்பான் அதிரடி!
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் இரவு நேரங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களைத் தடுக்க, சாலைகளில் உள்ள ஆழ்துளைகிணறுகளின் மூடிகளில் ஜொலிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டி அசத்தி இருக்கிறது அந்நாட்டு அரசு.
ஆழ்துளைகிணறு என்றதுமே நம் எண்ணங்களில் வருவது குழந்தைகளின் மரணம் தான். இந்தியாவில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆழ்துளைகிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து பலியாவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் போது அவர்களைக் காப்பாற்ற போதுமான தொழில்நுட்பங்கள் இதுவரை கண்டுபிடிக்க படாமலேயே இருக்கிறது. எனவே ஆழ்துளை கிணறுகளை சரியாக மூடி, முறையாக பராமரிப்பதே அதற்கு மிகப் பெரிய தீர்வாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் ஜப்பானில் டோக்கியோ நகரில் சாலைகளில் உள்ள ஆழ்துளைகிணறுகளின் மூடிகளில் வண்ணமயமாக ஜொலிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டியிருக்கிறது அந்நாட்டு அரசு. டோக்கியோவில் மட்டும் சுமார் 27 ஆழ்துளைக் கிணறுகளில் இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு பிடித்த கார்ட்டூன் கேரக்டர்கள் தான் அந்த ஸ்டிக்கர்களில் இடம் பெற்றுள்ளன. சூர்ய மின்சக்தி மூலம் இயங்கும் அந்த ஸ்டிக்கர்கள் இரவு நேரங்களில் பிரகாசமாக ஜொலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இரவு நேரத்தில் சாலைகளில் பயணிப்பவர்கள், ஆழ்துளைகிணறு இருக்கும் இடத்தை சரியாக அடையாளம் காண முடிகிறது.
இதன் மூலம் விபத்துகள் தடுக்கப்படுவதுடன், குற்றச்சம்பவங்களும் குறையும் என நம்புகிறது ஜப்பான் அரசு. நம் நாட்டிலும் இதுபோல் செய்தால், தொடரும் விபத்துகளை தடுக்கலாமே என சமூக ஆர்வலர்கள் யோசனை கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications