ராஜினாமா செய்துவிட்டு ஓடும் அமைச்சர்கள்.. நேபாளத்தில் உண்மையில் என்ன நடக்கிறது! நிலைமை மோசம்
காத்மண்டு: சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மிகப் பெரிய போராட்டங்கள் வெடித்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், அந்நாட்டின் பிரதமர் இல்லம் உள்ளிட்ட பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தது. இதையடுத்து அரசுக்கு இனியும் ஆதரவாக இருக்க முடியாது எனச் சொல்லி அங்குள்ள அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்டனர். அந்நாட்டுப் பிரதமரும் ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அங்குக் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான நேபாளத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்திருக்கிறது. அங்கு 26 சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையே இந்த போராட்டத்திற்குத் தொடக்கப் புள்ளியாக இருந்தது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் போராட்டம் மிகப் பெரியளவில் நடந்தது. நேற்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடந்தது.

போராட்டம்
இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதில் 19 பேர் உயிரிழந்த நிலையில், மேலும், பலர் காயமடைந்தனர். வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசாரால் முடியாத நிலையில், ராணுவம் களமிறக்கப்பட்டது. ஆனாலும், நிலைமை கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து 26 சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையையும் வாபஸ் பெறுவதாக அந்நாட்டு அரசு வலியுறுத்தியது. மேலும், வன்முறை குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டது.
மேலும், சமூக வலைத்தளங்களுக்கான தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதால் மக்கள் போராட்டங்களைக் கைவிட வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி அழைப்பு விடுத்தார். இருப்பினும், அதை ஏற்கப் போராட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர். ஷர்மா ஒலி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
நேபாளத்தில் வன்முறை
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலக மாட்டார் என அந்நாட்டு அமைச்சர் பிரித்வி சுப்பா குருங் முதலில் கூறியிருந்தார். ஆனால், காத்மண்டுவில் இரண்டு நாட்களாகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. நேபாள பிரதமரின் இல்லத்தில் வன்முறையாளர்கள் நுழைந்தனர். இதனால் நிலைமை மோசமானது.. அப்போது ஷர்மா ஒலியும் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு ராணுவ தலைமை கேட்டுக் கொண்டது. இதனால் வேறு வழியில்லாமல் போராட்டக்காரர்களின் அழுத்தத்திற்குப் பணிந்து பதவி விலகினார்.
அமைச்சர்கள் ராஜினாமா
போராட்டக்காரர்களின் கோரிக்கையை அரசு புறக்கணிப்பதாகக் கூறி, ஏற்கனவே பல அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். பிரதமர் உட்பட மொத்தம் 25 அமைச்சர்கள் நேபாள அமைச்சரவையில் இருந்த நிலையில், அவர்களில் பலரும் ராஜினாமா செய்தனர். முதலில் வன்முறை மோதல்களைத் தொடர்ந்து, கூட்டணி அரசில் நேபாளி காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் ராஜினாமா செய்தார். உள்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் வன்முறைக்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து விவசாய அமைச்சர் ராம்நாத் அதிகாரி தனது பதவியிலிருந்து விலகினார். இத்தகைய சூழ்நிலைகளில் அரசில் நீடிப்பது சாத்தியமில்லை என்று சொல்லி சுகாதார அமைச்சர் பிரதீப் பவுடலும் கூறினார். அவரும் ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறினார். அதேபோல், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் தேஜு லால் சவுத்ரி, நீர் வரித்துறை அமைச்சர் பிரதீப் யாதவ் ஆகியோரும் ராஜினாமா செய்தனர். இளைஞர்களின் குறைகள் குறித்து அரசுக்குத் தெரிந்திருந்தும் அதைப் புறக்கணித்ததாக சவுத்ரி ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
நிலைமை மோசம்
சட்டமன்ற உறுப்பினர் அசிம் ஷாவும் தனது பதவியைத் துறந்தார். காங்கிரஸ் தலைவர் சேகர் கொய்ராலா தனது நெருங்கிய அமைச்சர்களை ராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி ஆளும் தரப்பினர் பலருமே அரசுக்கு எதிராகத் திரும்பி ராஜினாமா செய்தனர். இதன் காரணமாகவே வேறு வழியில்லாமல் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும், இன்னுமே அங்கு அமைதி திரும்பவில்லை.. போராட்டம் தொடர்ந்தே வருகிறது.












Click it and Unblock the Notifications