பாகிஸ்தான் பார்லிமென்ட்டில் செம சண்டை.. "விசுக் விசுக்" என்று பறந்த பட்ஜெட் உரைகள்.. ஒரே அமளி!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பட்ஜெட் உரையின் நகல்கள் கிழித்து எறியப்பட்டன. ஆளும் கட்சியின் பெண் உறுப்பினர் காயம் அடைந்தார்.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் நாடாளுமன்ற கீழ் சபையில் 2021-22 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை (பட்ஜெட்) அந்த நாட்டின் நிதியமைச்சர் சவுகத் தரின் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
அடேங்கப்பா.. சுவிட்சர்லாந்து காதலியை பார்க்க..பாகிஸ்தான் சென்ற ஐடி ஊழியர்..2 ஆண்டுக்கு பின் விடுதலை
பட்ஜெட் மீதான விவாதம்
இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. பாகிஸ்தான் எதிர்க்கட்சியான முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராகவும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கும் ஷெபாஸ் ஷெரீப் பட்ஜெட்டில் விவாதத்திற்கான உரையை தொடங்கினார் . அப்போது அவையில் கடும் கூச்சல் குழப்பம் எழுந்தது.
கடும் மோதல்
பாகிஸ்தான் ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) உறுப்பினர்கள் கடும் கூச்சலி ட்டனர். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியான முஸ்லிம் லீக் (நவாஸ்) உறுப்பினர்களும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருக்கையில் இருந்து எழுந்து வந்து நேருக்கு நேர் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.
பெண் உறுப்பினர் காயம்
ஆவேசம் அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பட்ஜெட் உரையின் நகல்களை கிழித்து எறிந்தனர். இதனால் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் பெண் உறுப்பினர் மாலேகா பொகாரி கண்ணில் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆளும் பி.டி.ஐ தலைவர் அலி அவான் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்து பயங்கரமாக கூச்சலிட்டார்.
போர்க்களம் போல்..
ஒட்டு மொத்தத்தில் நாடாளுமன்றமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் மோதல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. முன்னதாக கண்ணில் காயமடைந்த பெண் உறுப்பினர் மாலேகா பொகாரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மோதல் குறித்து எதிர்க்கட்சியான முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவரான ஷெபாஸ் ஷெரீப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
ஆளும் கட்சியின் கொடூரம்
ஆளும் கட்சி எவ்வாறு கொடூரத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் மேற்கொண்டது என்பதை இன்று முழு தேசமும் தங்கள் தொலைக்காட்சித் திரைகளில் பார்த்தது. இம்ரான் கானும் அவரது முழு கட்சியும் எவ்வளவு நெறிமுறையற்றவை என்பதையும், பி.டி.ஐ எவ்வாறு ஒரு பாசிச மற்றும் தவறான கட்சியாக மாறியுள்ளது என்பதையும் நாட்டு மக்கள் பார்த்து கொண்டிருகிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
|
மண்டைகள் தப்பின
நல்லவேளை பட்ஜெட் உரை புத்தகம் மெலிதாக இருந்தது.. பெரிய புத்தகம் போல இருந்திருந்தால் பலரது மண்டைகள் உடைந்து ரத்த ஆறு ஓடியிருக்கும். அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்காமல் எம்பிக்கள், பாதுகாவலர்களின் மண்டைகள் தப்பின!