நாளை நமதே.. மலேசியாவில் ஒலித்த எம்ஜிஆர் பாடல்.. நெகிழ்ந்தபடி பிரதமர் மோடி தமிழில் போட்ட பதிவு
கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழில் எம்ஜிஆர் பாடல்களின் தீவிர ரசிகராக உள்ளார். இந்நிலையில் தான் இன்று பிரதமர் மோடிக்கு அவர் வழங்கிய ‛லஞ்ச்' விருந்தில் எம்ஜிஆரின் நாளை நமதே பாடல் பாடப்பட்டது. இதுதொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து தமிழில் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று மலேசியா புறப்பட்டு சென்றார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை, மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் நேரில் வரவேற்றார். அதன்பிறகு இன்று இருதரப்பு இடையேயான உயர்மட்ட கூட்டம் நடந்தது.

இந்தகூட்டத்தில் இருதரப்பு வர்த்தகம், பாதுகாப்பு சார்ந்த பல்வேறு அம்சங்கள் பற்றி பிரதமர் மோடி, மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோர் விவாதித்தனர். அதன்பிறகு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.
எம்ஜிஆரின் ரசிகர்
பிறகு பிரதமர் மோடிக்கு, மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் ‛லஞ்ச்' விருந்து வழங்கினார்.அன்வர் இப்ராஹிம், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். எம்ஜிஆரின் பாடல்களை அவர் விரும்பி கேட்கும் பழக்கத்தை வைத்துள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு அவர் வழங்கிய லஞ்ச் விருந்தில் எம்ஜிஆரின் பாடல் பாடப்பட்டது.
நாளை நமதே பாடல்
இசை கலைஞர் ஒருவர் மேடையில் எம்ஜிஆரின் ‛நாளை நமதே' பாடலை பாடினார். மேலும் பாடலுக்கேற்ப நடனமும் இடம்பெற்றிருந்தது. இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு நெகிழ்ந்துள்ளார். தமிழில் உள்ள அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
நம்மை போலவே எம்ஜிஆரின் ரசிகர்
‛‛எனது நண்பர் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த மதிய விருந்தில், பாடப்பட்ட பாடல்களில் ஒன்றாக மகத்தான மனிதர் எம்ஜிஆர் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‛நாளை நாமதே' என்ற பாடலும் இருந்தது! இந்தியாவில் உள்ள நம்மில் பலரை போலவே, பிரதமர் அன்வர் இப்ராஹிமும் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ஆவார்'' என்று கூறியுள்ளார்.
நேற்றே சொன்ன பிரதமர்
முன்னதாக நேற்றைய தினம் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் காரில், பிரதமர் மோடி ஒன்றாக பயணித்தார். கோலாலம்பூரில் மலேசிய வாழ் இந்தியர்களுக்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடி, அன்வர் இப்ராஹிம், எம்ஜிஆர் ரசிகர் என்று பேசினார். இதுபற்றி பிரதமர் மோடி கூறியதாவது:
‛‛இந்திய திரைப்படங்கள், பாடல்கள் மலேசியாவில் பிரபலம் என்பதை நான் கேள்விப்ட்டு இருக்கிறேன். நீங்கள் கூட அறிந்து வைத்திருப்பீர்கள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் நன்றாக பாடல் பாடக்கூடியவர் என்பதை இந்தியாவில் அவர் பாடிய பழைய இந்தி மொழிப்பாடல் தொடர்பான வீடியோக்கள் வைரலாகின. எம்ஜிஆரின் தமிழ் பாடல்களை அதிகம் விரும்க்கூடியவர் என்பது அற்புதமான விஷயம்'' என்று கூறினார்.
3% பேர் தமிழ் பேசுவதாக...
மேலும் பிரதமர் மோடி பேசுகையில், ‛‛மலேசியா என்பது இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் 2வது பெரிய நாடாக உள்ளது. இந்தியா - மலேசியாவை இணைக்கும் பாலமாக ஏராளமான இதயங்கள் இங்கே உள்ளனர். நீங்கள் (இந்திய வம்சாவளியினர்) தான் இருநாடுகளையும் இணைக்கும் வாழும் பாலமாக உள்ளீர்கள். இருநாடுகள் இடையே உணவு பழக்கவழக்கம், மொழி ஒற்றுமைகள் உள்ளன.
உலகம் முழுவதும் இந்தியாவுக்கான இணைப்பு பாலமாக தமிழ் உள்ளது. தமிழ் கலாசாரம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. தமிழ் இலக்கியங்கள் மிகவும் பழமையானது. மலேசியாவில் 3 சதவீதம் பேர் தமிழ் பேசுகிறார்கள். அதோடு மலேசியா அரசு தமிழ் மொழிமை சிறுபான்மை மொழியாக அங்கீகரித்துள்ளது'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications