''எம்.ஹெச். 17 மலேசிய விமானம் பறக்கும்போதே வெடித்துச் சிதறியுள்ளது''!!
கீவ்: உக்ரைனில் சுட்டுத் தள்ளப்பட்ட மலேசிய விமானம் வெளியே இருந்து சக்திவாய்ந்த பொருட்களால் தாக்கப்பட்டதால் துண்டு துண்டாக வெடித்துச் சிதறியது முதல்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17 கடந்த ஜுலை மாதம் 17ம் தேதி கிழக்கு உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் உடல் சிதறி பலியாகினர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நெதர்லாந்து பாதுகாப்பு ஆணையம் தனது முதல்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
விமானம் தரையில் விழும் வரை அதில் தொழில்நுட்பக் கோளாறோ, அவசர நிலைமையோ ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணை
மலேசிய விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் விமானம் அதிக சக்தி வாய்ந்த பொருட்களால் தாக்கப்பட்டது என்று அறிக்கையில் உள்ளது. பக் ஏவுகணை வீசித் தாக்கினால் அது பல சக்தி வாய்ந்த பொருட்களாக பிரிந்து தான் இலக்கை தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம்
விமானம் சக்தி வாய்ந்த பொருட்களால் தாக்கப்பட்டவுடன் பல துண்டுகளாக வெடித்துச் சிதறி தரையில் விழுந்துள்ளது.
ரஷ்யா
உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப் படையினர் தான் பக் ஏவுகணை வீசி விமானத்தை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த பக் ஏவுகணையை ரஷ்யா தான் அவர்களுக்கு கொடுத்தது என்று செய்திகள் வெளியாகின.
சடலங்கள்
தாக்கப்பட்ட மலேசிய விமானத்தில் சென்று பலியான 298 பேரில் இதுவரை 193 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்தவர்களில் 193 பேர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.