வாட்டர் பாட்டில் தண்ணீரில் கண்ணுக்குத் தெரியாத பிளாஸ்டிக் துகள்கள்.. ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரால் உடல் நலத்துக்கு ஆபத்து ஏற்படும் என அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது.
நியூயார்க்: பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயனத் துகள்கள் கலந்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பெரு நகரங்கள் மட்டுமின்றி, சிறிய ஊர்களில் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து வைக்கப்படும் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. ஏனெனில் அந்தளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால், அவ்வாறு விற்பனை செய்யப்படும் தண்ணீர் உடல் நலத்திற்கு உகந்ததல்ல, ஆபத்து விளைவிப்பவை என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இது ஆய்வு ஒன்றின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆய்வு
அமெரிக்காவில் உள்ள ஆர்ப்மீடியா என்ற பத்திரிகையாளர் அமைப்பு நியூயார்க் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தியது. நியூயார்க் பல்கலைக்கழக மைக்ரோ பிளாஸ்டிக் ஆய்வு பேராசிரியர் ஷெர்ரிமேசன் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
வடிகட்டி மூலம் ஆய்வு
இதற்கென உலகம் முழுவதும் உள்ள 11 முன்னணி நிறுவனங்களின் 259 குடிநீர் பாட்டில்கள் ஆய்வு செய்யப்பட்டன. முதலில் இந்த பாட்டில்களில் உள்ள தண்ணீரை 1.5 மைக்ரான் அதாவது 0.0015 மில்லி மீட்டர் அளவு துவாரம் கொண்ட வடிகட்டி மூலம் வடித்தெடுத்தனர்.
ரசாயனத் துகள்கள்
பின்னர் வடிகட்டியில் தேங்கிய பொருட்களை மைக்ராஸ்கோப் மற்றும் இன்ப்ரா ரெட் சோதனை மூலம் ஆய்வு செய்தனர். அப்போது பெரும்பாலான பாட்டில்களில் பாலிபுரோப்லின், நைலான், பாலித்தீன், டெரபதலேட் (பெட்) துகள்கள் என ஏராளமான பிளாஸ்டிக் மற்றும் ரசாயனத் துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
10 ஆயிரம் துகள்கள்
சராசரியாக ஒரு லிட்டர் தண்ணீரில் 0.1 மில்லி மீட்டர் அளவு கொண்ட 10.4 பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருந்தது தெரியவந்தது. சில பாட்டில்களில் ஒரு லிட்டர் நீரில் 10 ஆயிரம் துகள்கள் கூட கலந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
7 % ஓகே
விதிவிலக்காக ஒருசில பாட்டில்களில் மட்டுமே இந்தத் துகள்கள் இல்லாமல் இருந்தது. மொத்தம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 93 சதவீத பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளன. மீதமுள்ள 7 சதவீத பாட்டில்களில் மட்டுமே தண்ணீர் கலப்படம் இல்லாமல் இருந்துள்ளது.
செரிமானம் ஆகாது
இத்தகைய பிளாஸ்டிக் மற்றும் ரசாயனத் துகள்கள் கலந்த தண்ணீரைத் தொடர்ந்து குடித்து வருபவர்களுக்கு, ஈரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இந்தத் துகள்களை நமது உடல் செரிமானம் செய்வதில்லை. எனவே, குடலுக்குள் செல்லும் இந்தத் துகள்கள் ரத்தக் குழாய்கள் வழியாக மற்ற உடல் உறுப்புகளுக்குச் சென்று உபாதைகளை ஏற்படுத்துகின்றன.
வர்த்தகம்
தற்போது உலகம் முழுவதும் சுமார் 210 கோடி பேர் பாட்டில் குடிநீரை பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதனால், ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி லிட்டர் பாட்டில் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் கிட்டத்தட்ட ரூ.9 லட்சத்து 36 ஆயிரம் கோடிக்கு தண்ணீர் வர்த்தகம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.