ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, உள்ளிட்ட 4 நாடுகள் பயணம் முடிந்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி
டெல்லி: அரசுமுறை பயணமாக ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
வணிகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய 4 நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக கடந்த மாதம் 29-ம் தேதி புறப்பட்டார். இன்று பிரான்ஸ் நாட்டில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு அவர் இந்தியா திரும்பினார்.

ஜெர்மனி, ஸ்பெயின் பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையே சில வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக மோடியின் ரஷ்ய பயணத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை, இருநாட்டு அதிகாரிகளுடன் மோடி-புதினின் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
மேலும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 2ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச பொருளாதார மன்றத்திலும் பிரதமர் மோடியும், அதிபர் புதினும் உரையாற்றினர். இதனிடையே கூடங்குளத்தில் மேலும், இரு அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாயின. மேலும் இந்தப் பயணத்தின் போது மங்கோலிய அதிபர், ஐ.நா பொதுச்செயலாளார் ஆகியோரையும் சந்தித்து பேசினார் மோடி.
பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்த மோடி, அந்நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள இம்மானுவேல் மாக்ரோனை சந்தித்து பேசினார். அப்போது, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்குவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.












Click it and Unblock the Notifications