இத்தாலியில் படகு கவிழ்ந்து விபத்து – 300க்கும் மேற்பட்ட லிபிய அகதிகள் உயிரிழப்பு
திரிபோலி: லிபியாவில் இருந்து இத்தாலிக்கு குடியேறுவதற்காக படகுகளில் சென்ற 300க்கும் மேற்பட்ட அகதிகள் மோசமான வானிலையால் ஏற்பட்ட ராட்சத அலைகளால் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
லிபியாவின் திரிபோலி நகருக்கு அருகே உள்ள கடற்கரையில் இருந்து 2 படகுகளில் அகதிகளாக 300க்கும் மேற்பட்டோர் இத்தாலி நோக்கி பயணம் செய்தனர்.
இத்தாலி அருகே உள்ள தீவு ஒன்றின் அருகே படகு சென்றபோது மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 8 மீட்டர் உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகளாலும், சூறாவளி காற்றாலும் இந்த விபத்து ஏற்பட்டது.
நான்கு நாட்களாக உயிரை கையில் பிடித்தபடி நடுக்கடலில் தத்தளித்த ஒன்பது பேர் ஒருவழியாக லாம்பெடுசா தீவில் கரையேறி உள்ளனர். அவர்களை இத்தாலி கடற்படையினர் மீட்டனர். இத்தாலி கடற்படையினர் மற்றவர்களை தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
லிபியாவில் நடைபெற்று வருகின்ற கடுமையான உள்நாட்டு சண்டை காரணமாக சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் படகு மூலமாக இத்தாலிக்கு சட்டவிரோதமாக குடியேற முயன்றதாக விபத்தில் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.