மியான்மர் மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு... இருவர் உயிரிழப்பு.... 30 பேர் படுகாயம்
நாய்பிடாவ்: மியான்மரில் ராணுவ ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிராகப் போராடியவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர், மேலும் 30 பேர் காயமடைந்தனர்.
மியான்மர் நாட்டில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அந்நாட்டு ராணுவத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது. மேலும், மியான்மர் அரசியல் தலைவர் ஆங் சான் சூகி, அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த ராணுவ புரட்சியைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இந்தப் போராட்டங்களைக் கலைக்க அந்நாட்டு ராணுவம் எடுத்த நடவடிக்கைகளும் பெரியளவில் பலனளிக்கவில்லை.
தொடரும் போராட்டம்
மியான்மர் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான மாண்டலேயில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு கடந்த சில நாட்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று பொதுமக்கள் போராடும் இடத்தில் ராணுவ வீரர்களும் போலீசாரும் குவிக்கப்பட்டனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திடீர் துப்பாக்கிச் சூடு
அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் கற்களை போலீசார் மீது வீசினர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், பாதுகாப்புப் படையினர் திடீரென்று போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர். ரப்பர் குண்டுகளை மட்டுமின்றி நிஜ குண்டுகளையும் ராணுவத்தினர் பயன்படுத்தியாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இருவர் உயிரிழப்பு, 30 பேர் படுகாயம்
இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் நிஜ குண்டுகள் பாய்ந்ததில் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர்களில் ஒருவர் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்ததாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். அவர்களில் சுமார் 15 பேர் வரை நிஜ குண்டுகள் பாய்ந்ததில் காயமடைந்துள்ளனர். மற்றவர்கள் ரப்பர் குண்டுகள் தாக்கியதில் காயமடைந்துள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்,
இணையத்தில் பரவும் வீடியோ
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அங்கு குடியிருக்கும் மக்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். படுகாயமடைந்த போராட்டக்காரர்கள் ரத்த வெள்ளத்தில் இருப்பது போன்ற நெஞ்சைப் பதற வைக்கும் அந்த வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது. மேலும், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைச் சிலர் பேஸ்புக்கிலும் லைவாக ஒளிபரப்பியுள்ளனர்.
மியான்மர் ராணுவம்
மியான்மரில் கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இதை ஆட்சி கழிப்பு என்று அழைக்கக் கூடாது என்றும் அந்நாட்டு ராணுவம் தரப்பில் தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் முறையாக நடைபெற்றவுடன் ஆட்சி திருப்பியளிக்கப்படும் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.