தாய்லாந்து பூகம்பம்.. பாங்காக்கில் சரிந்த ஒரே கட்டிடம் சீன நிறுவனம் கட்டியதாம்! வெளியான ஷாக் தகவல்
பாங்காக்: மியான்மரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவுக்கு மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு தாய்லாந்து வரை உணரப்பட்ட நிலையில், அங்கு பாங்காக்கில் கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதற்கிடையே இடிந்து விழுந்த இந்த கட்டிடத்தால் சீன நிறுவனம் ஒன்று வம்பில் சிக்கியுள்ளது.
மியான்மரை தாக்கிய இந்த நிலநடுக்கம் தாய்லாந்திலும் பரவலாக உணரப்பட்டது. குறிப்பாகத் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் இந்த பூகம்பம் உணரப்பட்டது. அங்கு பாங்காக்கில் 33 மாடி உயரமான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில், அந்த கட்டிடம் ஒரே நொடியில் இடிந்து விழுந்தது. கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த பல தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நொடியில் சரிந்த கட்டிடம்
அவர்களை மீட்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. அந்த இடத்தில் இருந்து இதுவரை 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 32 பேர் காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 83 பேர் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
அங்கு யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். வெப்ப இமேஜிங் ட்ரோன்களுடன் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. அதில் குறைந்தது 15 பேர் உயிருடன் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடிந்த ஒரே கட்டிடம்
பாங்காக் என்பது வானுயர்ந்த கட்டிடங்கள் நிறைந்த ஒரு நகரமாகும். அங்கு வேறு எந்த கட்டிடமும் அழிவை சந்திக்காத நிலையில், இந்த ஒரு கட்டிடம் மட்டும் அழிந்துள்ளது. 45 மில்லியன் பவுண்டுகள் செலவில் கடந்த 3 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த இந்தக் கட்டிடம் ஒரே நொடியில் இடிந்து விழுந்தது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக இருக்கிறது.. குறிப்பாகக் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி ஏழு நாட்களில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யத் தாய்லாந்தின் துணைப் பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் உத்தரவிட்டுள்ளார்.
வம்பில் சிக்கிய சீன நிறுவனம்
தாய்லாந்து அரசின் தணிக்கை துறைக்காகக் கட்டப்பட்டு வந்த இந்தக் கட்டிடத்தை இத்தாலிய-தாய்லாந்து மேம்பாட்டு பிஎல்சி மற்றும் சீனா ரயில்வே நம்பர் 10 என்ற இரு நிறுவனங்கள் இணைந்தே கட்டி வந்தன. இதில் சீனா ரயில்வே நம்பர் 10 என்பது சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். அதில் சீனா நிறுவனத்திற்கு 49 சதவீத பங்குகள் இருக்கிறது.
கடந்த 2018ம் ஆண்டில் சீனா ரயில்வே எண் 10 தாய்லாந்து என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போது முதல் தாய்லாந்தில் மேற்கொள்ளப்படும் அலுவலக கட்டிடங்கள், ரயில்வே மற்றும் சாலைகள் உள்ளிட்ட பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை கண்டிராக்ட் எடுத்து இந்த நிறுவனம் கட்டி வருகிறது. இந்த நிறுவனத்தில் சோஃபோன் மீச்சாய், பிரச்சுவாப் சிரிகேத் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளனர்.
விசாரணை
நிலநடுக்கத்தில் இந்த ஒரு கட்டிடம் மட்டும் இடிந்து விழுந்துள்ள நிலையில், இதன் உறுதித்தன்மை சர்ச்சையாகியுள்ளது. இதையடுத்து இது தொடர்பான விசாரணையில் தாய்லாந்து அரசு இறங்கியுள்ளது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications