"பேரழிவின் உச்சம்!" மியான்மரை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்.. 1600ஐ கடந்த உயிரிழப்புகள்! கதறும் மக்கள்
மியான்மர்: கடந்த சில நாட்களுக்கு முன்பு மியான்மர் நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு மிக மோசமான நிலநடுக்கம் ஏறப்பட்டது. இது மியான்மர் மட்டுமின்றி தாய்லாந்து, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வரை உணரப்பட்டது. இதற்கிடையே மியான்மர் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1600ஐ தாண்டியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மியான்மரின் சகாயிங்கின் வடமேற்கில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 12:50 மணிக்கு 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சகாயிங் பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து சில நிமிடங்களுக்குப் பிறகு, 6.7 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது. இரு வலுவான நிலநடுக்கங்களைத் தொடர்ந்து சிறிய அளவிலான நில அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளது.

மியான்மர் நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் மியான்மர் நாடு முழுக்க உணரப்பட்டது. மேலும், தாய்லாந்து தலைநகர் பாங்காக், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், சீனாவின் கிழக்கு மாநிலங்கள், கம்போடியா மற்றும் லாவோஸிலும் பூகம்பம் உணரப்பட்டது.. பல இடங்களில் கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போலச் சரிந்தன. ஏற்கனவே உள்நாட்டுப் போர், ராணுவம் ஆட்சியால் மியன்மர் கடும் இன்னல்களை எதிர்கொண்ட நிலையில், இந்த பூகம்பம் நிலைமையை மேலும் மோசமாக்கியது.
1600ஐ தாண்டிய உயிரிழப்புகள்
மீட்புப் பணிகள் அங்குத் தொடர்ந்து நடந்து வரும் சூழலில், நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,600ஐ தாண்டியது. சர்வதேச சமூகங்களைச் சேர்ந்த மீட்புப் படையினரும் களத்தில் இறங்கியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் துரிதமடைந்துள்ளன. மியான்மரில் இப்போது 1,644க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அந்நாட்டு ராணுவ அரசு உறுதி செய்துள்ளது. அதேநேரம் உயிரிழப்புகள் 10 ஆயிரம் வரை செல்லலாம் என்று அமெரிக்க ஏஜென்சி ஒன்று கணித்துள்ளது.
அண்டை நாடான தாய்லாந்தில், நிலநடுக்கத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அங்குத் தலைநகர் பாங்காக்கில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் அப்படியே சரிந்து விழுந்தது. அதில் உள்ளே தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
பேரழிவு
மியான்மரின் மண்டலேயில் பல கட்டிடங்கள் சரிந்துள்ளன. சகாயிங் முதல் இராவதி நதி வரை கட்டப்பட்ட சுமார் 100 ஆண்டுகள் பழமையான அவா பாலம் தண்ணீரில் இடிந்து விழுந்தது. அந்தளவுக்குப் பாதிப்புகள் மோசமாக இருந்தது. மியான்மரில் வரலாறு காணாத அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ராணுவ ஆட்சியாளர்கள் சர்வதேச சமூகத்தினரிடம் உதவி கோரியுள்ளனர். எந்த நாட்டில் இருந்தும் உதவியை வரவேற்பதாக அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்தியா
மியான்மர் நிலநடுக்கம் குறித்த செய்தி கிடைத்தவுடன் முதலில் உதவிகளை அறிவித்த நாடுகளில் ஒன்று இந்தியா. நிலநடுக்கம் குறித்து கவலை தெரிவித்த இந்தியப் பிரதமர் மோடி, தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் செய்தியைக் கேட்டு கவலை அடைந்தேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். இந்தியா தேவையான உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது" என்றார்.
ஏற்கனவே மியான்மருக்கு உதவுவதற்காக இந்திய விமானப்படை அதன் ஹிண்டன் விமான தளத்திலிருந்து டென்ட், போர்வைகள், நீர் சுத்திகரிப்பான்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட 15 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது. 'ஆபரேஷன் பிரம்மா' திட்டத்தின் கீழ், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உதவுவதற்காக 80 தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) பணியாளர்களைக் கொண்ட ஒரு குழுவையும் இந்தியா மியான்மருக்கு அனுப்புகிறது.












Click it and Unblock the Notifications