உக்ரைன் நாட்டிலுள்ள மாடி வீடுகளில் "மர்ம அடையாளங்கள்.." என்ன நடக்கிறது?
கீவ்: உக்ரைனில் உள்ள அடுக்குமாடி கட்டடங்களின் மீது மர்ம அடையாளங்கள் உள்ளன. இதனடிப்படையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என்பதால் வீடுகளின் மாடியில் அடையாளங்கள் எதுவும் இருந்தால் அழிக்கும்படி உக்ரைன் அரசு அறிவுறுத்தியுள்ளது.
Recommended Video
உக்ரைனில் போர் தீவிரமடைந்து வருகிறது. ரஷ்ய ராணுவம் ஏவுகணை, குண்டு வீச்சு நடத்துகிறது. மேலும் பீரங்கி வண்டிகளில் பயணித்து ராணுவ வீரர்கள் தரைவழி தாக்குதலை தொடர்கின்றனர்.
தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்ய வீரர்கள் வேகமாக முன்னேற முயற்சிக்கின்றனர். ஆனால் உக்ரைன் ராணுவத்தினர் அவர்களை தடுத்து சண்டையிட்டு வருகின்றனர். இதனால் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

மாடிகளில் அடையாளங்கள்
இந்நிலையில் உக்ரைன் நாட்டில் சில நகரங்களில் உள்ள உயரமான கட்டங்கள், எரிவாயு குழாய்களின் மீது சிவப்பு நிறத்தில் கூட்டல், பெருக்கல் போன்ற அடையாளங்கள் உள்ளன. இந்த அடையாளங்களை யார் செய்தது என்பது தெரியவில்லை. இருப்பினும் ரஷ்ய வீரர்களின் வான்வெளி தாக்குதலுக்கு உதவும் வகையில் சதிக்காரர்கள் இச்செயலை அரங்கேற்றி இருக்கலாம் என உக்ரைன் நாட்டின் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

ரஷ்யாவுக்கு துப்பு
இதுபற்றி உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில், ‛‛சிவப்பு நிற அடையாளங்கள் வான்வெளியில் இருந்து பார்த்தால் நன்கு தெரியும் படி உள்ளது. இதன்மூலம் ரஷ்யாவுக்கு துப்பு கொடுக்கப்படுகிறது. இந்த அடையாளங்களை அழிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

மேயர் அறிவுரை
கெய்வ் நகரத்தின் மேயர் அலெக்சாண்டர் தனது பேஸ்புக் பதிவில், ‛‛ வீட்டு மேற்கூரையில் அடையாளங்கள் இருந்தால் அதனை அழிக்க அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனை ஒவ்வொருவரும் உடனடியாக சரிபார்க்க வேண்டும். மற்றவர்களின் வீடுகளில் அடையாளங்கள் இருந்தாலும் அதுபற்றி உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவியுங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.

நாடுகள் உதவி
மேற்கத்திய நாடுகளால் கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் ரஷ்யா போர் நடவடிக்கையை கைவிடவில்லை. போர் நிறுத்த பேச்சுவார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்கி உதவி செய்து வருகின்றன.












Click it and Unblock the Notifications