விண்வெளி ஆய்வில் ஒரு மைல் கல்.. செவ்வாயில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்த நாசா!
செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதியில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது.
நியுயார்க்: செவ்வாய்க்கிரகத்தின் உடோபியா பிளனிசியா என்ற பகுதியில் அதிக அளவில் தண்ணீர் இருப்பது புதிதாக கண்டறியப்பட்டுள்ளது
செவ்வாய்க் கிரக சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க நாசாவின் செயற்கைகோள் அனுப்பிய தகவலை ஆராய்ந்ததில் அந்த கிரகத்தின் உடைந்த ஒரு பகுதியில் தண்ணீர் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது விண்வெளி வீரர்களின் ஆய்வுக்கு எதிர்காலத்தில் பேருதவியாக அமையும் என்று கூறப்படுகிறது.
செவ்வாய் கிரகம் விஞ்ஞானிகளால் சிகப்பு கோள் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கிரகத்தின் சுற்றுப்பாதையில் நாசா தனது செயற்கோளை நிலைநிறுத்தி ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், அந்த செயற்கைகோளில் இருந்து கிடைத்த தகவல்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
அதன்படி, நாசா செயற்கைகோள் அனுப்பிய தகவலில் செவ்வாய்க்கிரகத்தின் உடோபியா பிளனிசியா என்ற பகுதியில் அதிக அளவில் தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வட அமெரிக்காவில் உள்ள நியூமெக்சிகோவில் அமைந்திருக்கும் பெரிய ஏரிகளில் ஒன்றான சுப்பிரீயர் ஏரியில் இருக்கும் தண்ணீரைவிடவும் செவ்வாய்க் கிரகத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தண்ணீர் இருக்கும் இடத்தின் பரப்பளவு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தண்ணீர் 80 முதல் 170 மீட்டர் தடிமனில் படிந்து உள்ளது என்றும், அதில் 50 முதல் 85 சதவீதம் பனிக்கட்டியாக படிந்திருப்பதாகவும், எஞ்சிய தண்ணீர் துசிகளாலும் பாறை துகள்களாலும் கலந்து இருப்பதாகவும் ராடார் கருவித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க்கிரக தடிம மற்றும் வறட்சியான வளிமண்டலத்தின் மீது நீராவி பரவி இருப்பதாகவும் கருதப்படுகிறது. உடோபியா பிளனிசியாவில் 1 முதல் 10 மீட்டர் தடிமனில் மண் சூழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிரக துருவத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தண்ணீர் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு சதவீதத்துக்கும் குறைவான குளிந்த தண்ணீர் அங்கிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், 3 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட உடோபியா பிளனிசியாவில் தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது விஞ்ஞானிகள் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகவல் மூலம் செவ்வாய்க்கிரக வரலாற்றில் புதிய திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆய்வு பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருக்கிறது.