பதன்கோட் தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு- கூட்டுக் குழு விசாரணைக்கு நவாஸ் ஷெரீப் உத்தரவு!
இஸ்லாமாபாத்: இந்தியாவின் பதன்கோட் விமானப் படை தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து கூட்டு குழு விசாரணை நடத்த அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளம் மீது கடந்த வாரம் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டபோதும் இந்திய வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்தனர். இதில் எல்லை தாண்டி ஊடுருவி வந்த 6 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இத்தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பதால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் உள்துறை அமைச்சர் செளத்ரி நிசார் அலி கான், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நசீர் கான் ஜன்ஜூவா, நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் ஆஜிஸ், நிதி அமைச்சர் இஷாக் தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்துக்குப் பின்னர் பாகிஸ்தான் புலனாய்வுத் துறை, உளவு அமைப்பு மற்றும் ராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய கூட்டு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, பதன்கோட் தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்பு குறித்து விசாரிக்கும் என உத்தரவிட்டுள்ளார் நவாஸ் ஷெரீப்.
முன்னதாக இது தொடர்பாக ராணுவ தளபதி ரஹீல் ஷரீப்புடனும் நவாஸ் ஷெரீப் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்தியா- பாகிஸ்தான் இடையே நல்லுறவு உருவாக இந்த விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நவாஸ் ஷெரீப் கருதுவதாலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications