Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திக்கு முக்காடும் நேபாளம்.. உள்துறை அமைச்சர் ராஜினாமா! ஜென் z போராட்டத்தால் கை மீறி போகும் நிலைமை

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: நேபாளத்தில் ஜென் Z தலைமுறையினர் முன்னெடுத்துள்ள போராட்டத்தால் அந்த நாடே ஸ்தம்பித்துள்ளது. தலைநகர் காத்மாண்டு மட்டும் இன்றி நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. சமூக வலைதள தடைக்காக மட்டுமே இந்த போராட்டம் நடைபெறுகிறதா? போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய மலைப்பிரதேசமான நேபாளம் ஸ்தம்பித்து போயுள்ளது. ஜென் Z தலைமுறையினர் முன்னெடுத்த போராட்டத்தால் அந்த நாடு ஒட்டுமொத்தமாக திக்கி திணறியுள்ளது. இந்த போராட்டத்திற்கான காரணம் குறித்தும், போராட்டக்காரர்கள் சொல்வது பற்றியும் இங்கே பார்க்கலாம்.

nepal-apps-ban-unrest-19-killed-home-minister-steps-down

சமூக வலைதள நிறுவனங்கள்

நேபாளத்தில் பிரதமராக கே.பி. ஷர்மா ஒலி உள்ளார். இவரது அரசு அண்மையில் புதிய சட்டம் ஒன்றை அமல்படுத்தியது. அதாவது, சமூக வலைதள நிறுவனங்கள் தினசரி நடவடிக்கைகளை கண்காணிக்க, நேபாள நாட்டை சேர்ந்த நபர் ஒருவரை நிறுவனம் நியமிக்க வேண்டும். நியமிக்கப்பட்ட நபர், வாராவாரம் நாட்டிற்கு எதிராக சமூக வலைதளத்தில் நடக்கும் விவாதங்களை கவனித்து தங்களுக்கு வழங்குவார்கள் என்று அரசு கூறியிருந்தது. இதற்காக 7 நாட்கள் அவகாசமும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

விதிமுறைகளை பின்பற்றவில்லை

ஆனால் இந்த விதிமுறைகளை வாட்ஸ்அப், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக வலைதள நிறுவனங்கள் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து 26 சமூக வலைதள நிறுவனங்களுக்கும் நேபாள அரசு தடை விதித்தது. ஒட்டுமொத்தமாக திடீரென சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், நேபாள இளைஞர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நேபாளத்தில் மிகப்பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஊரடங்கை மீறி போராட்டம்

இந்த போராட்டத்தில் நேபாளத்தின் பிரபலங்களும் ஆதரவு தெரிவித்ததால் அந்த நாடே ஸ்தம்பித்தது. தலைநகர் காத்மாண்டு மற்றும் முக்கிய பகுதிகளான பொக்காரா, புட்வால், தாரன், கோரகி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் திரண்டனர். இதையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. ஊரடங்கையும் மீறி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்தனர்.

இதனால் நிலைமை கையை மீறிப் போனது. உடனடியாக கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயற்சித்தனர். மேலும், தண்ணீரை பீச்சி அடித்தனர். போராட்டக்காரர்கள் பதிலுக்கு மரங்களின் கிளைகளை உடைத்து தூக்கி எறிந்தனர். அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

20 பேர் பலி

சில போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளும் நுழைந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 20 பேர் பலியாகினர். 250-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் சீருடையில் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அதேபோல, கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேபாளம் முழுக்க போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. பொக்காராவில் முதல்வர் அலுவலகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்கடங்காமல் போவதால் நேபாள பிரதமர் கே.பி. ஒலி, அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

உள்துறை அமைச்சர் ராஜினாமா

போராட்டம் கையை மீறி செல்லும் நிலையில், நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ராஜினாமா செய்துள்ளார். சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்ப பெறப்படலாம் என்று சொல்லப்படுகிறது. ஊழலை மறைக்க, கருத்து சுதந்திரத்தை ஒடுக்க அரசு முயற்சிப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் யுஜன் ராஜ்பண்டாரி என்பவர் கூறுகையில், "சமூக வலைதள தடையால் இந்த போராட்டம் வெடித்துள்ளது. ஆனால் இது மட்டுமே நாங்கள் இங்கு கூடுவதற்கு காரணம் இல்லை. நேபாளத்தில் அனைத்து இடங்களிலும் நிறுவனமயமாக்கப்பட்டுள்ள ஊழலுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்" என்றார்.

பிரச்சனை முடிவுக்கு வர வேண்டும்

மற்றொரு போராட்டக்காரர் கூறுகையில், அரசாங்கத்தின் "சர்வாதிகார அணுகுமுறைக்கு" எதிராக இந்த போராட்டம் நடைபெறுகிறது. "நாங்கள் மாற்றத்தைக் காண விரும்புகிறோம். எங்கள் தலைமுறையுடன் இந்த பிரச்சனை முடிவுக்கு வர வேண்டும்" என்றார்.

1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் Z தலைமுறையினர் என்று அழைக்கப்படுகிறார்கள். டெக்னாலஜி வளர்ச்சி கண்ட பிறகு பிறந்த இந்த தலைமுறையினர்தான் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். நேபாளத்தில் இன்று நடைபெற்று வரும் போராட்டத்தில் பெருமளவு ஜென் Z தலைமுறையினரே பங்கேற்றுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+