ஆட்சியையே கவிழ்த்த 2k கிட்ஸ்.. நேபாள் போராட்டத்தின் பின்னணியில் சூடான் குருங்.. இவர் யார் தெரியுமா?
காத்மாண்டு: அண்டை நாடான நேபாளத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டதை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்து வன்முறையானது. இந்த வன்முறை 2வது நாளாக இன்றும் தொடர்ந்த நிலையில் பிரதமர் கேபி சர்மா ஒலி இன்று ராஜினாமா செய்தார். இப்படி 2 நாளில் நேபாளத்தில் ஆட்சியை கவிழ்த்ததன் 2K கிட்ஸ்கள் யார்? அவர்களின் போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் சூடான் குருங் என்பவர் யார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டின் அண்டை நாடாக நேபாளம் உள்ளது. இங்கு பிரதமராக இருப்பவர் கேபி சர்மா ஒலி. இந்நிலையில் தான் சமீபத்தில் நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டன.

அதன்படி மொத்தம் 26 சமூக வலைதளங்களுக்கு பிரதமர் கேபி சர்மா ஒலி தடை விதித்தார். இதில் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் அடங்கும். இந்த சமூக வலைதளங்களின் தடைக்கு இளம் வயதினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேபாளத்தில் வன்முறை
இந்நிலையில் தான் நேற்று முதல் நேபாளத்தில் போராட்டம் வெடித்தது. நேற்றைய தினம் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என்று ஏராளமானவர்கள் தலைநகர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர்.அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதில் 20 பேர் பலியாகினர். 300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இந்த போராட்டம் இன்று 2வது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. இன்றைய தினம் போராட்டக்காரர்கள் மிகவும் உக்கிரமாக காணப்பட்டனர். அரசியல் கட்சிகளின் தலைவர்களை பிடித்து தாக்குவது, அவர்களின் வீடுகளுக்கு தீவைப்பது என்று மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். இதனால் நேபாளம் முழுவதும் வன்முறை வெடித்தது.
பிரதமர் ராஜினாமா
திரும்பும் திசையெங்கும் போராட்டம், வீடுகள் எரிப்பு, கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகிறது . நாடாளுமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் தீயிட்டு எரிக்கப்பட்டது. பிரதமர் கேபி சர்மா ஒலி ராஜினாமா செய்ய வேண்டும்.
அவரது அரசில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது. அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறினர். இதையடுத்து பிரதமர் கேபி சர்மா ஒலி பணிந்தார். தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
Gen Z தலைமுறை போராட்டம்
இதன்மூலம் நேற்று, இன்று என 2 நாள் போராட்டத்தின் பலனாக நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு Gen Z தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் தான். அதாவது 1997 முதல் 2012ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் ஜென் - இசட் தலைமுறை என்று கூறப்படுகின்றனர். அவர்கள் தான் தற்போது இந்த போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டுள்ளனர். இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் 2K கிட்ஸ்கள் என்று சொல்லலாம். பொதுவாக 2K கிட்ஸ் என்பதற்கு சில விளக்கங்கள் உள்ளன.
1995 முதல் 2002ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் என ஒரு தரப்பினரும், இன்னொரு தரப்பினர் 2000ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் தான் 2 K கிட்ஸ் எனவும் கூறுகின்றனர். அதன்படி பார்த்தால் 2 நாள் போராட்டம் நடத்திய இந்த 2K கிட்ஸ்கள் தான் தற்போது நேபாள பிரதமர் சர்மா ஒலியின் ஆட்சியை கவிழ்த்துள்ளனர். நேற்றைய தினம் போராட்டத்தை இந்த இளைஞர்கள் முன்னெடுத்த பிறகு மற்ற வயது கொண்டர்களும் கைகோர்த்த நிலையில் தற்போது ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது.
முக்கிய தலைவர் யார்?
மேலும் இளைஞர்களை அரசுக்கு எதிராக போராட்டத்துக்கு தூண்டி ஒருங்கிணைப்பு செய்த ஒருவரும் உள்ளார். ஆனால் அவர் 2k கிட்ஸ் இல்லை. மாறாக அவர்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். அவரது பெயர் சூடான் குருங் (Sudan Gurung). இவருக்கு வயது 36.
இவர் முதலில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக வலம் வந்தார். சூடான் குருங் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தனது மகனை பறிகொடுத்தார். அதன்பிறகு அவர் பேரிடர் பாதித்த மக்களுக்கு உதவுவது, இளைஞர்களை ஒன்றாக இணைத்து சமூக செயற்பாட்டுக்கான குழுவை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தினார்.
பள்ளி மாணவர்களாக போராட்டம்
தற்போது ஹமி நேபால் எனும் தன்னார்வ தொண்டு அமைப்பின் தலைவராக உள்ளார். மக்களுக்கு உதவி செய்யும் பணியை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பில் அதிகமான இளைஞர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர் தான் இந்த போராட்டத்துக்கு திட்டம் வகுத்து கொடுத்துள்ளார்.
கையில் புத்தகம், ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து காத்மாண்டுவில் பல ஆயிரம் இளைஞர்களை இவர் தான் ஒருங்கிணைத்துள்ளார். அதன்பிறகு அமைதி பேரணி என்ற பெயரில் போராட்டத்தை முன்னெடுக்க திட்டம் போட்டு கொடுத்துள்ளார். அதன்படியே 1997 முதல் 2012ம் ஆண்டுக்கு இடையேயான காலக்கட்டத்தில் பிறந்த ஜென் - இசட் தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலியின் ஆட்சியை கவிழ்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications