உள்ளே வரும் அமெரிக்கா.. மத்திய கிழக்கில் எகிறும் பதற்றம்.. ஹவுதிக்கு இறுதி எச்சரிக்கை தந்த இஸ்ரேல்
டெல் அவிவ்: இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் விமான நிலையத்தில் இன்று ஏவுகணை தாக்குதல் நடந்தது. இதனால் டெல் அவிவ் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இந்த் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுப்போம் என்றும் காரணமான யாரையும் விட போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் கடந்த சில காலமாகவே பதற்றம் அதிகரித்து வருகிறது. காசாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போர் முடிந்தபாடில்லை. தொடர்ந்து நடந்து வருகிறது. இடையில் டிரம்ப் பதவியேற்ற போது சில காலம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த போதிலும், அது நீடிக்கவில்லை.

பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை
இதற்கிடையே காசா பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இது குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டமும் நடந்தது. தற்கிடையே திடீரென இஸ்ரேல் மீது ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய ஹவுதி படை மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் இதற்கு பதிலடி தரப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்..
வீடியோ
இது தொடர்பாக பெஞ்சமின் நெதன்யாகு தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ஹவுத்தி தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஒரு தாக்குதலை மட்டும் நடத்தாது.. மாறாக பல தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தும் என நெதன்யாகு தெரிவித்தார் அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த காலங்களிலும் நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்காலத்திலும் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.
தற்போதைய சூழலில் என்னால் அனைத்தையும் விரிவாக சொல்ல முடியாது. ஆனால், நிச்சயம் பதிலடி கொடுப்போம். அமெரிக்கா, எங்களுடன் ஒருங்கிணைந்து வருகிறது. தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஹவுதி தாக்குதலுக்கு எதிரான எங்கள் பதிலடி ஒரு முறை மட்டும் இருக்காது. பல தாக்குதல்களை நடத்த போகிறோம்" என்றார்.
பாதுகாப்பு அமைச்சர்
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸவும் ஹவுதி தாக்குதலுக்கு நிச்சயம் பழிவாங்குவோம் என உறுதியளித்துள்ளார். ஈரானுடன் இணைந்த செயல்பட்டு வரும் ஹவுத்திகளுக்கு எதிராக வலுவான பதிலடி கொடுப்போம் என உறுதியளித்துள்ளார். இஸ்ரேலுக்கு யார் தீங்கு செய்தாலும் அதற்கு ஏழு மடங்கு பதிலடி தருவோம் என இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஹவுதி படைகளால் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை டெல் அவிவ் வெளியே உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் 3ஆவது முனையத்திற்கு அருகே 75 மீட்டர் தொலைவில் விழுந்தது. விமான நிலையத்தின் பார்கிங் அருகே உள்ள சாலையில் விழுந்தது. இஸ்ரேல் நாட்டின் மிகவும் பாதுகாப்பான பகுதிகளில் ஒன்றான இங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் அங்கு 25 மீட்டர் ஆழமான பள்ளமும் ஏற்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமானம்
சரியாக இந்த தாக்குதல் நடத்தும் போது தான் டெல் அவிவ்வை நோக்கி ஏர் இந்தியா விமானம் சென்று கொண்டு இருந்தது. இந்தத் தாக்குதல் குறித்து தகவல் கிடைத்தவுடன் ஏர் இந்தியா விமானம் அபு தாபிக்கு திருப்பிவிடப்பட்டது. மேலும், அடுத்த சில நாட்களுக்கு டெல் அவிவ் விமான நிலையத்திற்கான அனைத்து சேவைகளையும் ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது.












Click it and Unblock the Notifications