21 வயதுக்கு குறைவானவர்களுக்கு ”நோ சிகரெட்”! அமெரிக்காவில் புதிய சட்டம்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் மக்கள் தங்கள் உடல்நலம் குறித்த விழிப்புணர்வை பெறும் வகையில் சிகரெட்டுகள் வாங்குவதற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்ற நவம்பர் மாதம் 19 ஆம் தேதியே இந்த சட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது.
எனினும், சட்டம் அமல்படுத்துவதற்கு முன் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
சாலையோர கடைகள்:
நியூயார்க்கில் சாலையோரம் அமைந்துள்ள செய்தித்தாள்கள், சாக்லேட்கள், காபி, கேக்குகள் விற்கும் கடைகளில் சிகரெட்டுகள் அதிகமாக விற்கப்படுகின்றன. எனவே அந்த கடைகளின் வாசலில் 21 வயதிற்கு கீழ் சிகரெட்டுகள், புகையிலை விற்கக்கூடாது என்ற எச்சரிக்கை வாசகம் ஒட்டப்பட்டுள்ளது.
அடையாள அட்டை அவசியம்:
வாடிக்கையாளர்கள் கடைகளில் சிகரெட்டுகள் வாங்க வரும்போது தங்கள் வயதை நிரூபிக்கும் வகையில் அடையாள அட்டைகளை காண்பிக்க வேண்டும் என்றும், அதை கடைக்காரர்கள் ஸ்கேன் செய்து பார்த்து வயதை உறுதி செய்த பின்பே சிகரெட்டை அவர்களுக்கு விற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிகரெட்டுகளுக்கு தடை:
கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் நகரத்தில் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அங்கு சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் அதிக வரி:
ரெஸ்டாரண்டுகள், பார்கள், பூங்கா மற்றும் சதுக்கங்கள், கடற்கரைகளில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை புகைபிடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவிலேயே நியூயார்க்கில் தான் சிகரெட்டுக்கு அதிகமாக வரி வசூலிக்கப்படுகிறது.
மற்ற மாகாணங்களுக்கும் அமல்:
இந்த புதிய சட்டத்தால் நியூயார்க்கில் 18 முதல் 20 வயதிற்குள் உள்ளவர்கள் சிகரெட்டுகள் பிடிப்பது பாதியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அமெரிக்காவின் மற்ற மாகாணங்களுக்கும் இந்த சட்டத்தை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.