அமைதிக்கான நோபல் பரிசுக்கு 259 பேர் போட்டி: மலாலா, பில் கிளிண்டன் இடையே கடும் போட்டி
வாஷிங்டன்: 2013ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்த ஆண்டு அதிக பட்ச அளவில் 259 நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது சாதனையாக கருதப்படுகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், பாகிஸ்தான் புரட்சி சிறுமி மலாலா உள்ளிட்ட 10 பேரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வருகிற அக்டோபர் 11-ந்தேதி அறிவிக்கப்படுகிறது. அதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.
259 போட்டியாளர்கள்.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுப் போட்டியில் 259 பேர் உள்ளனர். அவர்களில் 209 பேர் தனிநபர்கள். 50 பேர் நிறுவனங்களை சேர்ந்தவர்கள். இந்த ஆண்டுதான் நோபல் பரிசு வரலாற்றிலேயே அதிக போட்டியாளர்கள் உள்ளனர். 2011ம் ஆண்டு 241 பேர் போட்டியிட்டனர்.
10 பேர் கடும் போட்டி
259 பேரில் 10 பேரிடையே கடும் போட்டி நிலவுகிறது என்று நோபல் பரிசு நிறுவன தலைவர் ஜியர் லுன்டஸ்டெட் தெரிவித்தார்.
பில்கிளின்டன் - மலாலா
பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடி தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிர் பிழைத்துள்ள பள்ளி சிறுமி மலாலா யூசப்சாய் (15), மியான்மர் அதிபர் தியின் சியன், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் ஆகியோர் போட்டியாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்தியர்கள் 12 பேர்
அமைதிக்கான நோபல் பரிசுக்குரியவர்களின் பட்டியலில் 12 இந்தியர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மகாத்மா காந்திக்கு
உலக நாடுகளில் கலை மற்றும் அறிவியலில் சாதனை படைத்தவர்களுக்கும், அமைதிக்கான முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
நோபல் பரிசின் 112 ஆண்டு கால வரலாற்றில் மகாத்மா காந்திக்கு அமைதிக்கான பரிசு வழங்காமல் மிகப் பெரிய தவறு இழைத்து விட்டோம்'' என்று தலைவர் ஜியர் லுன்டஸ்டெட் வருத்தம் தெரிவித்துள்ளார்.