சீனுக்குள் வந்த வடகொரியா.. அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் அடுத்த டார்கெட்! ஈரானுக்கு ஃபுல் சப்போர்ட்!
பியாங்யாங்: ஈரான் மீது அமெரிக்கா நடத்தியிருந்த தாக்குதல்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. வடகொரியாவும் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்திருக்கிறது. "மத்திய கிழக்கில் இப்போது நிலவும் பதட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் காரணம். இரு நாடுகளின் இந்த பொறுப்பற்ற செயல்களுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்" என்று வடகொரியா அழைப்பு விடுத்திருக்கிறது.
வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் இது குறித்து கூறியதாவது, "ஓயாத போரின் விளைவாக, மத்திய கிழக்கில் நிலவும் பதட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே காரணம். இதனை மேற்கு நாடுகளும் ஏற்று ஊக்குவிக்கிறது. அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இது ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் உரிமைகளை மீறும் செயலாகும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த மோதல் செயல்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒருமனதாக கண்டனம் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறது.

ஈரானும்-வடகொரியாவும் பல ஆண்டுகளாக நட்பு நாடுகளாக இருக்கின்றன. காரணம் இரு நாடுகள் மீதும் மேற்கு நாடுகளின் பொருளாதார தடைகள் தொடர்கின்றன. எனவே, எதிரிக்கு, எதிரி நண்பன் என்கிற வகையில் இரு நாடுகளும் கூட்டு சேர்ந்து நிற்கின்றன. குறிப்பாக அணுசக்தி திட்டம் மற்றும் ஏவுகணை மேம்பாடு தொடர்பாக இரு நாடுகளும் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கடுமையான அழுத்தத்தை சந்தித்து வருகின்றன.
இரு நாடுகளுக்கு இடையே கடந்த 1980களில் தான் நட்பு அதிகரித்தது. அந்த நேரத்தில் ஈராக்குடன், ஈரான் கடுமையான போரில் ஈடுபட்டிருந்தது. போரின்போது ஈரானுக்கு, வடகொரியா ஆயுதங்களை கொடுத்து உதவியது.
மட்டுமல்லாது வடகொரியா நீண்டகாலமாகவே ஈரானுக்கு ஏவுகணை தொழில்நுட்பங்களை வழங்குவதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. ஈரானின் ஷாஹாப்-3 (Shahab-3) ஏவுகணை வடகொரியாவின் நோ டோங் (No Dong) ஏவுகணையின் கிட்டத்தட்ட ஒரு நகல் என்று கருதப்படுகிறது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி தொழில்நுட்பப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் சர்வதேச அளவில் நிலவுகின்றன. குறிப்பாக ஈரானின் நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் போன்ற அணுசக்தி தளங்களை உருவாக்க வடகொரியா உதவியதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.
சிம்பிளாக சொல்வதெனில், ஈரான் மூலம், வடகொரியா தனது கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்துக்கொள்கிறது. அதேபோல, வடகொரியா மூலம் தனது தொழில்நுட்ப தேவைகளை ஈரான் பூர்த்தி செய்துக்கொள்கிறது. இப்படி இருக்கையில் ஈரானுக்கு ஆதரவாக வடகொரியா அறிக்கை விடுத்திருப்பது சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications