இப்போ ஜீவா அடிப்பான் பாரு! தென்கொரியாவை ஏற்றிவிடும் அமெரிக்கா.. சண்டைக்கு ரெடியான வடகொரியா
பியோங்யாங்: அமெரிக்க துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹாரிஸ் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் வட கொரியா அதிரடியாக ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இவ்வாறு சோதனையை மேற்கொள்வது இது மூன்றாவது முறையாகும். இம்முறை வட கொரியாவின் ஏவுகணை ஜப்பான் கடல் எல்லைக்கு நெருக்கமாக விழுந்துள்ளது.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா சார்பில் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா கடந்த வாரம் ஏவுகணை சோதனையை மேற்கொண்டிருந்தது.

ராணுவ பயிற்சி
கிழக்கு ஆசியாவில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தொடர்ந்து முயன்று வரும் நிலையில் இதற்கு வட கொரியா தரப்பில் கடும் எதிர்ப்புகள் அவ்வப்போது எழுந்து வந்தன. இதனையடுத்து வட கொரியா மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. இருப்பினும் வடகொரியா தொடர்ந்து நெருக்கடியை எதிர்த்து வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் அமெரிக்கா, ஜப்பானுடன் இணைந்து தென்கொரியா ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

கமலா ஹாரிஸ் பயணம்
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக குறைந்த தூரம் பயணிக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்து பார்த்தது. இதனையடுத்து, வடகொரியாவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இவ்வாறு பதற்றம் நிலவி வரும் நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தென் கொரியாவுக்கு பயணம் செய்திருந்தார். ஏற்கெனவே உருவாகியிருந்த பதற்றம் குறையாத நிலையில் தற்போது கமலா ஹாரிஸ் தென் கொரியாவுக்கு பயணம் செய்திருந்தது இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்திருந்தது.

எதிர்ப்பு
கமலா ஹாரிஸின் வருகையை எதிர்த்து வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று முறை ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. ஆனால் கடைசியாக நடத்திய ஏவுகணை சோதனை புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, இந்த ஏவுகணைகள் ஜப்பான் நாட்டின் பொருளாதார மண்டலத்திற்கு நெருக்கமாக விழுந்துள்ளது. இதனை ஜப்பான் நாட்டு கடற்படை உறுதி செய்துள்ளது.

ஜப்பான்
இது குறித்து அந்நாட்டு செய்தி ஊடகங்கள் கூறியதாவது, "இன்று அதிகாலை ரோந்து பணியின் போது இந்த ஏவுகணை விழுந்ததற்கான தடயங்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வகை ஏவுகணைகள் சுமார் 400 கி.மீ தூரம் வரை பயணிக்கும். அதேபோல 50 கி.மீ உயரத்தில் பயணித்து தாக்கும் தன்மை கொண்டவை. இவை சீரான பாதையில் செல்வது கிடையாது எனவே இதனை முன்கூட்டியே கணிப்பது என்பது சிரமமான விஷயம்" என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் ராஜதந்திரம்
இவ்வாறு இரண்டு ஏவுகணைகள் ஜப்பானின் பொருளாதார மண்டலத்தையொட்டிய கடற்பகுதியில் விழுந்துள்ளதால், அந்நாட்டு ராணுவம், இந்த வழியாக பயணிக்கும் கப்பல்கள் மற்றும் விமானங்களை அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தைவானுக்கு அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி சென்று வந்த நிலையில், சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர் விமானங்களை கொண்டு ஒத்திகை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications