வெனிசுலாவை அமெரிக்கா தாக்கிய நேரம்.. சத்தமே இல்லாமல் வடகொரியா செய்த காரியம்! உச்சக்கட்ட பதற்றம்
பியோங்யாங்: யாருமே எதிர்பார்க்காத வகையில் வெனிசுலா மீது அமெரிக்கா திடீரெனத் தாக்குதலை நடத்தியிருந்தது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இந்த நேரத்தில் சத்தமே இல்லாமல் வடகொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. இது கொரியத் தீபகற்பப் பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. வடகொரிய இதுபோல செய்ய என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த 2 நாட்களாகவே வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய திடீர் தாக்குதல் குறித்தே பேசப்பட்டு வருகிறது. வெனிசுலாவைத் தாக்கியது மட்டுமின்றி அந்நாட்டின் அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியையும் கைது செய்து அமெரிக்கா நாடுகடத்தியது. இவை எல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கும்போதே வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியிருக்கிறது.

வடகொரியா செய்த காரியம்
இன்று காலை வடகொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகத் தென் கொரிய இராணுவம் தெரிவித்தது. வடகொரியா கடலை நோக்கியே இந்த ஏவுகணைகளைச் செலுத்தி இருந்தாலும் கூட, ஏற்கனவே அங்கு தென்கொரியா- வடகொரியா மோதல் இருப்பதால் இது பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது.
வடகொரியாவின் தலைநகர் பகுதியிலிருந்து காலை 7:50 மணியளவில் பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் அவை கிழக்கு கடல் பகுதியை நோக்கிப் பாய்ந்ததாகவும் தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அந்த ஏவுகணைகள் எவ்வளவு தூரம் பயணித்தன என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த ஏவுகணை தொடர்பான தகவல்களை அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தென்கொரியக் கூட்டுப் படைத் தலைவர் அலுவலகம் கூறியுள்ளது.
ஜப்பான்
வடகொரியாவில் இருந்து ஏவுகணைகள் எழப்பட்டுள்ளதை ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. அதேநேரம் வடகொரியாவின் இந்த தாக்குதலால் இதுவரை எந்தவொரு சேதங்களும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
வடகொரியாவில் சீக்கிரமே கிம் ஜாங் உன் கட்சி சார்பில் மாநாடு நடைபெறுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக வடகொரியா இதுபோன்ற ஒரு மாநாட்டை நடத்துகிறது. அந்த மாநாட்டிற்கு முன்பு உலகிற்குத் தனது ராணுவ வலிமையைக் காட்ட வேண்டும் என்பதற்காகவே வடகொரியா இந்தச் சோதனைகளை மேற்கொள்கிறதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. மேலும், வரும் நாட்களில் இதுபோன்ற ஏவுகணைகளை லான்ச் செய்வது மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.
வடகொரியா மாநாடு
இந்த மாநாடு சர்வதேச அளவிலும் கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக மாறியிருக்கிறது. அமெரிக்கா- வடகொரியா பேச்சுவார்த்தை பல ஆண்டுகளாக முடங்கியுள்ள நிலையில், அது தொடர்பாக முக்கிய முடிவுகளை இந்த மாநாட்டில் வடகொரியா அறிவிக்க வாய்ப்புகள் அதிகம். அதேநேரம் இதுவரை இந்த மாநாடு எப்போது நடைபெறும் என்பது குறித்து வடகொரியா எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், தென்கொரிய உளவுத்துறை தகவல்படி, இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் இந்த மாநாடு நடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது..
முக்கியம்
வடகொரியா இந்தச் சோதனையை நடத்தியிருக்கும் நேரமும் கவனிக்கத்தக்கது. ஒரு பக்கம் வெனிசுலா நாட்டின் மீது சனிக்கிழமை தான் அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்து இருந்தது. மற்றொரு பக்கம் தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங், சீனா அதிபர் ஜி ஜின்பிங்குடன் உச்சி மாநாட்டிற்காகச் சீனாவுக்குப் புறப்பட ரெடியாக இருந்தார். சரியாக அந்த நேரத்தில் வடகொரியா இந்தச் சோதனையை நடத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications