டிரம்ப்-கிம் சந்திப்பு நடக்குமா? - அமெரிக்காவை எச்சரித்த வட கொரியா
அமெரிக்காவுடன் தென் கொரியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதால் கோவமடைந்த வட கொரிய, தென் கொரியாவுடன் நடக்க இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.
இந்த பயிற்சியை ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றும்,படையெடுப்புக்கான ஒரு ஒத்திகை என்றும் வட கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ கூறியுள்ளது.
ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே நடக்க உள்ள வரலாற்று பேச்சுவார்த்தை குறித்தும் கேசிஎன்ஏ எச்சரித்துள்ளது.
டிரம்ப்-கிம் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்துவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், பேச்சுவார்த்தைக்குக் குறித்து வட கொரியாவின் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்பது தங்களுக்கு தெரியாது எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.
எது குறித்த பேச்சுவார்த்தை நடக்க இருந்தது?
கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வட கொரிய மற்றும் தென் கொரிய தலைவர்கள் இடையே நடந்த வரலாற்றுப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, புதன்கிழமை நடக்க இருந்த சிறிய பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரு நாட்டு தலைவர்கள் ஒப்புக்கொண்ட விஷயங்கள் குறித்து, வட கொரிய மற்றும் தென் கொரிய நாட்டு பிரதிநிதிகளும் மேலும் விவாதிக்க இருந்தனர்.
அணு ஆயுதங்களைக் கைவிடுவது, இரு நாடுகள் இடையிலான விரோத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுவது, சீனா, அமெரிக்கா இடையே இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவது போன்றவற்றை விவாதிக்க இருந்தனர்.
வட கொரியா ஏன் கோவமடைந்தது?
அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையேயான கூட்டு ராணுவ பயிற்சிகள் வட கொரியாவை அடிக்கடி கோபப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், 100 போர் விமானங்கள், எண்ணிக்கை குறிப்பிடப்படாத B-52 ரக குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் எஃப்-15கே ரக ஜெட் ஆகியவற்றுடன் தென் கொரியா மற்றும் அமெரிக்காவும் இணைந்து இந்த சமீபத்திய ராணுவ பயிற்சியினை நடத்தியது.
இந்த பயிற்சியை ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றும்,படையெடுப்புக்கான ஒரு ஒத்திகை என்றும் முன்பு கூறியதை போலவே வட கொரியா தற்போதும் கூறியுள்ளது.
1953ல் அமெரிக்கா மற்றும் தென் கொரியா கையெழுத்திட்ட ஒரு பரஸ்பர பாதுகாப்பு உடன்பாட்டின் அடிப்படையில், இந்த பயிற்சிகள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே என இரு நாடுகளும் அழுத்தமாகக் கூறியுள்ளன.
புதன்கிழமை தென் கொரியாவுடன் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்ததன் மூலம், அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட கொரியா-அமெரிக்க உச்சிமாநாட்டின் தலைவிதியை பற்றி அமெரிக்கா கவனமாக விவாதிக்க வேண்டும்,
தென் கொரியவுடன் இணைந்து ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடும் நிலையில், வட கொரியா-அமெரிக்க இடையில் நடக்க உள்ள பேச்சுவார்த்தையின் தலைவிதியை பற்றி அமெரிக்கா கவனமாக விவாதிக்க வேண்டும்'' என கேசிஎன்ஏ கூறியுள்ளது.
பிற செய்திகள்:
- ஜெரூசலேம்: உலகின் சர்ச்சை மிக்க பிராந்தியமாக இருப்பது ஏன்?
- மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பதவி பறிப்பு: காரணம் என்ன?
- காஸா: அமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர் வெடித்த மோதல்கள் - 55 பேர் பலி