வான்கோழியை மன்னித்தார் ஒபாமா.. அமெரிக்காவில் தொடங்கியது தேங்ஸ்கிவ்விங் விழா!
வாஷிங்டன்: வான் கோழிக்கு மன்னிப்பு கொடுத்ததன் மூலம், அமெரிக்காவின் பிரபலமான நன்றி செலுத்தும் (Thanksgiving) விழாவை அதிபர் ஒபாமா, துவக்கி வைத்தார்.
நம்மூரில் பசு மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும், மாட்டுப் பொங்கலைப்போலவே, அமெரிக்காவிலும், விவசாயத்திற்கு நன்றி தெரிவிக்கும் ஒரு விழாவாக தேங்க்ஸ்கிவ்விங் விழா கொண்டாடப்படுகிறது.
அதன் தொடக்க நாளில், தன்னிடம் பரிசாக வழங்கப்படும், வான் கோழிக்கு அமெரிக்க அதிபர், மன்னிப்பு அளிக்க வேண்டும். அவ்வாறு மன்னிப்பு வழங்கப்படும் கோழி சமையலில் இருந்து அப்போதைக்கு தப்பிக்கும் என்பதுதான் அந்த விழாவின் சாராம்சம்.
ஆரம்பித்தது இப்படி
1980களில் இருந்து இந்த கோழி மன்னிப்பு சடங்கு நடைமுறையில் இருந்தபோதிலும், அதிகாரப்பூர்வமாக 1947ம் ஆண்டு ஹேரி ட்ரூமேன் அதிபராக இருந்த காலகட்டத்தில்தான், இந்த சடங்கு பிரபலமடைந்தது. எனவே அதையே ஆரம்பமாக கூறுகிறார்கள்.
விழாக்காலம்
இது அமெரிக்காவில் விழாக்கால தொடக்கம். கிறிஸ்துமஸுக்கு முன்பு தொடங்கி, புத்தாண்டை கடந்து நீடிப்பது அமெரிக்க விழாக்காலம். எனவே, இந்த விழாக்கால தொடக்கத்தில், அமெரிக்க அதிபராக பதவி வகிப்போருக்கு தேசிய வான்கோழி சம்மேளனத்தின் சார்பில் ஒரு வான் கோழி பரிசாக அளிக்கப்படும். அதை அவர் மன்னித்தேன் என்று கூற வேண்டும்.
கோழிகளுக்கு பெயர்
இந்த ஆண்டு ஒபாமாவுக்கு வழங்கப்பட்ட வான்கோழியின் பெயர், அபே. இந்த பெயரை கலிபோர்னியா பள்ளி குழந்தைகளை கொண்டு அதிபர் மாளிகை தேர்வு செய்திருந்தது. இந்த அபே கோழிக்கு மாற்றாக, ஹானஸ்ட் என்ற பெயர் கொண்ட ஒரு கோழியும் தயாராக வைக்கப்பட்டிருந்தது. அமெரிக்க நேரப்படி புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில், 'அபே இப்போது முதல் சுதந்திர பறவை' என ஒபாமா அறிவித்தார்.
நல்ல வெய்ட்
அபே மற்றும் ஹானஸ்ட் ஆகிய இரு கோழிகளும், 1000 ஏக்கர் பரப்பளவுள்ள பரந்த பண்ணையில் சத்துமிக்க உணவுகளால் வளர்க்கப்படும். தற்போது இரு கோழிகளுமே 22 இன்ச் கொண்டவையாகவும், 40 பவுண்ட் எடை கொண்டதாகவும் உள்ளது. இரண்டுமே ஜூலை மாதம் பிறந்த கோழிகள்.
நல்ல பராமரிப்பு
"அமெரிக்கர்களுக்கு தேங்ஸ்கிவ்விங் விழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என நிகழ்ச்சிக்கு பிறகு பேசிய ஒபாமா கூறினார். இதில் என்ன ஒரு சிக்கல் எனில், மன்னிக்கப்படும் கோழிகள், அதன்பிறகு நீண்ட காலம் வாழ்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. ஏனெனில் சத்துமிக்க தானியங்களால் வளர்க்கப்படும் அவைகள் எடை அதிகரித்து காணப்படும் என்பதால் சீக்கிரம் இறந்துவிடுகின்றன.
கோழி ஆர்வலர்கள்
2009ல் மன்னிக்கப்பட்ட கரேஜ் என்ற கோழியும், சீஸ் என்ற கோழியும் மட்டுமே இப்போதுவரை உயிரோடு உள்ளன. இது பீட்டா போன்ற கோழிக்கறி எதிர்ப்பு போராட்ட அமைப்புகளை சீண்டிவிட்டுள்ளது. இருப்பினும் இதை ஒரு சடங்காக பார்க்க வேண்டும் என்று வான்கோழி வளர்ப்பாளர்கள் கூறுகிறார்கள்.
இப்போதான் மன்னிப்பு
முன்பெல்லாம், பரிசளிக்கப்படும், கோழியை பலியிட்டு சாப்பிடும் வழக்கத்தைதான் அமெரிக்க அதிபர்கள் கொண்டிருந்தனர். ஆனால், ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ் காலத்திற்கு பிறகுதான், அதை மன்னிக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.