ஈராக்குக்கு 300 அமெரிக்க ராணுவ ஆலோசகர்கள்: ஒபாமா அறிவிப்பு
வாஷிங்டன்: உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ள ஈராக்குக்கு 300 அமெரிக்க ராணுவ ஆலோசர்கள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் அரசுப் படைகளுக்கு எதிராக போராடி வரும் சதாம் ஆதரவுப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். அந்நாட்டின் பல நகரங்களை கைப்பற்றியுள்ளது. தலைநகர் பாக்தாத் எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் கையில் விழும் என்று கூறப்படுகிறது.
மேலும் ஈராக்கில் உள்ள ஷியா முஸ்லிம்களின் புனிதத் தலமான கர்பலாவை தீவிரவாதிகள் தாக்கி அழிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது வான் வழி தாக்குதலை நடத்துமாறு அமெரிக்காவிடம் ஈராக் கெஞ்சி வருகிறது.
ஆனால் அமெரிக்காவோ, ஈராக்கில் சிக்கியிருக்கும் அமெரிக்கா நாட்டவரை பாதுகாக்க 275 வீரர்களை மட்டும் அனுப்புவதாக அறிவித்திருந்தது. அத்துடன் அரபிக் கடல் பகுதியில் இருந்த தமது போர்க் கப்பலை பெர்சிய வளைகுடாவுக்கு அனுப்பியும் வைத்தது.
இந்நிலையில் ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசின் பிரதமரான மாலிக்கை அகற்றிவிட்டு புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் அனைத்து இன மக்களும் பங்கேற்கும் அரசு ஒன்றை அமைக்கவும் அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
இதனிடையே புதிய திருப்பமாக அமெரிக்காவை சேர்ந்த 300 ராணுவ ஆலோசகர்களை ஈராக்குக்கு அனுப்ப தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.
ஈராக்கில் குறிப்பிடும்படியான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ள ஒபாமா, ஈராக்கில் நடைபெற்று வரும் போராட்டத்தையும், தலைநகர் பாக்தாத்துக்கு இருக்கும் அச்சுறுத்தலையும் அமெரிக்க உளவுப்பிரிவு கண்காணித்து வருகிறது என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கப் படைகளை மீண்டும் ஈராக்குக்கு அனுப்பும் திட்டம் ஏதுமில்லை என்றும் ஒபாமா கூறியுள்ளார்.