Neet Exam cancel: மே 3 ஆம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
டெல்லி: நாடு முழுவதும் கடந்த மே 3 ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் மறு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் நீட் மறுத்தேர்வுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. 10 ஆண்டுகளில் 89 முறை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது. 48 முறை மறுத்தேர்வு நடைபெற்றுள்ளது.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ சேர்க்கைக்கு நீட் எனும் நுழைவுத் தேர்வு 2017ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட்டிலிருந்து விலக்கு கேட்டு தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் போராடி வருகின்றன. ஆனாலும் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டுதான் வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இந்த நிலையில் இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு: ராஜஸ்தான் மாநிலத்தின் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர்வு ரத்து: முறைகேடு காரணமாகத் தேர்வின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானதால், மே 3 அன்று சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
சிபிஐ விசாரணை: இந்த வினாத்தாள் கசிவுப் பின்னணியில் உள்ள கும்பலைக் கண்டறியவும், இதன் வலைப்பின்னலைத் தகர்க்கவும் இந்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவிடம் (CBI) ஒப்படைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மறுதேர்வு எப்போது?: ரத்து செய்யப்பட்ட இந்தத் தேர்வுக்கான மறுதேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி
ஆண்டு முழுவதும் கடினமாக உழைத்துப் படித்து தேர்வு எழுதிய மாணவர்கள், இந்த ரத்து அறிவிப்பால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். "முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்றும் மறுதேர்வை எவ்வித குளறுபடியும் இன்றி நடத்த வேண்டும்" எனப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நீட் தேர்வு ரத்தால் மருத்துவச் சேர்க்கை தள்ளி போகிறது. ஆண்டு தோறும் மருத்துவ சேர்க்கை நடந்து முடிந்த பின்னரே பொறியியல் கல்லூரிகளுக்கான அரசு ஒதுக்கீட்டு சேர்க்கை நடத்தப்படும். காரணம், மருத்துவ சேர்க்கைக்கு முன்கூட்டியே பொறியியல் சேர்க்கை நடத்தினால், மருத்துவ சேர்க்கையில் இடம் கிடைத்ததும் பொறியியல் சேர்க்கையிலிருந்து விலகி மருத்துவத்தில் சேர்வதால் இடங்கள் வீணாகிறது. இதனால்தான் மருத்துவ கவுன்சலிங்கிற்கு பிறகு பொறியியல் கவுன்சலிங் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications