அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரம்: புதிய கட்டுப்பாடுகளை விதித்தார் ஒபாமா !
நியூயார்க்: அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக துப்பாக்கி விற்பனை மற்றும் வாங்குவதற்குப் புதிய கட்டுப்பாடுகளை அதிபர் ஒபாமா நேற்று அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரத்தால் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. ஆறுவயது குழந்தைகள்கூட தங்களுக்கு வேண்டாதவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் அவல நிலையும் அங்கு தான் நடந்து வந்தது. இந்த நிலையில் அங்குள்ள நிலைமையை மாற்ற துப்பாக்கி விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று அதிபர் ஒபாமா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
ஆனால் இது தொடர்பாக அவர் சட்டம் இயற்ற விரும்பினாலும், அந்நாட்டு செனட் அவை அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறது. இந்நிலையில், தனது நிர்வாக உத்தரவு ஒன்றின் மூலம் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒபாமா முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, துப்பாக்கிகளை விற்பனை செய்யும் கடைகள், பொருட்காட்சிகள் மற்றும் இணையதளங்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் நபரின் பின்னணி குறித்து தேசிய போலீசார் தீவிரமாக விசாரித்து அனுமதி அளித்த பின்னரே ஒருவருக்கு துப்பாக்கி விற்பனை செய்ய முடியும் என்று அதிபர் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்காவின் சில இடங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.