ஆழ்கடலில் பரவும் இருள்.. பூமியில் காலியாகும் ஆக்சிஜன்! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
வாஷிங்டன்: காற்று மாசு, கடல்மாசு காரணமாக ஆழ்கடலில் சூரிய ஒளி உட்புகாதவாறு இருப்பதாகவும், இதனால் பூமிக்கு ஆக்சிஜன் வழங்கும் 'பைட்டோபிளாங்க்டன்' போன்ற பாசிகள் அழிய வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பிளைமவுத் பல்கலைக்கழகம் மற்றும் பிளைமவுத் கடல் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் 2003ம் ஆண்டு முதல் கடல் பற்றி ஆய்வை மேற்கொண்டு வந்தனர். இந்த ஆய்வில், சுமார் 75 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான கடல் பரப்பில் சூரிய ஒளி போதுமான அளவுக்கு உள்ளே போவதில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 75 மில்லியன் சதுர கி.மீ என்பது, ஒரு கண்டனத்தின் சைஸை விட பெரியது.

ஏன் சூரிய ஒளி உள்ளே போகவில்லை என்று நடத்தப்பட்ட ஆய்வில், காற்று மாசு, கடல் மாசுதான் காரணம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கடல் நீரில் சூரிய ஒளி ஊடுருவுவதை ஃபோடிக் ஸோன் (Photic Zone) என்று அழைப்பார்கள். கன்னியாகுமரி, ராமேஸ்வரம் போன்ற கடல் பகுதியில் தெளிந்த நீர் இருப்பதால் 200 மீ வரை சூரிய ஒளி உள்ளே செல்லும். இது பல வகையில் கடல்வாழ் உயிரினங்களுக்கு உதவுகிறது.
உணவை வேட்டையாடுதல், இனச்சேர்க்கை உள்ளிட்டவற்றிற்கு சூரிய ஒளி அவசியம். அதேபோல 'பைட்டோபிளாங்க்டன்' போன்ற கடல் பாசிகள் வளர்வதற்கும் இது முக்கியம். இந்த பாசிகள் கடல் மீன்களுக்கு உணவாக இருக்கின்றன. மட்டுமல்லாது பூமியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தியில் 80% வரை இவை பங்களிக்கின்றன. அமேசான் காடுகள் பூமியின் நுரையீரல் என்பது உண்மையல்ல என்பது தனிக்கதை. இந்த 'பைட்டோபிளாங்க்டன்' பாசிகள் ஒளிச்சேர்க்கையில் ஈடுபட்டால்தான் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும்.
இப்போது கடல் பகுதிகள் மாசுபட்டு வருவதால் சூரிய ஒளி 10-50 மீட்டர் ஆழம் வரை மட்டுமே செல்கின்றன. இதனால் இந்த பாசிகளால் ஒளி சேர்க்கை செய்ய முடியாமல் போகிறது. பாசிகள் இறப்பதால் மீன்களுக்கு உணவு கிடைக்காமல் போகிறது. அதேபோல, மீன்களின் இனச்சேர்க்கையும் பாதிக்கப்படும். மீன்கள் கொஞ்சம் கொஞ்சமாக அப்படியோ அழிந்துவிடும். இது தவிர பூமிக்கு தேவையான ஆக்சிஜனும் கிடைக்காமல் போகும்.
இதற்கு காரணம் கடலில் ஏற்படும் மாசுதான் காரணம். ரசாயன கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை கலப்பதும் கடலில் சூரிய ஒளி குறைவதற்கு காரணமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications