சீனாவை நம்பி அடி வாங்கிய பாகிஸ்தான்.. இந்தியா சக்சஸ் ஆனது எப்படி தெரியுமா? பெயிலான HQ 9 சிஸ்டம்
இஸ்லாமாபாத்: காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு இன்று பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலை தடுக்க முடியாமல் பாகிஸ்தான் திணறிப்போனது. மொத்தம் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில் சீனாவை நம்பி பாகிஸ்தான் நம் நாட்டிடம் அடி வாங்கி உள்ளது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்'என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏறு்றுள்ளது. இது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் துணை அமைப்பாகும்.

இதற்கு இன்று நம் நாடு பதிலடி கொடுத்தது. நம் எல்லையில் ரஃபேல் போர் விமானங்களை பறக்கவிட்டு அதில் இருந்து ஏவுகணை, ஹம்மர் குண்டுகளை பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மொத்தம் 70 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
நள்ளிரவில் வெறும் 25 நிமிடத்தில் இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கு ‛ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிந்தூர் என்பது குங்குமத்தை குறிக்கும். காஷ்மீரில் ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்கி பெண்களின் குங்குமத்தை அழித்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்த பதிலடிக்கு ‛ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பஹவால்பூரில் உள்ள மார்கஸ் சுபன் அல்லா முகாம், தெஹ்ரா காலனில் உள்ள சர்ஜால் முகாம், கோட்லியில் உள்ள மார்கஸ் அப்பாஸ் முகாம், முசாபராபாத்தில் உள்ள சைதினா பிலால் முகாம் உள்ளிட்டவை தாக்கப்பட்டன. அதேபோல் லஷ்கர் இ தொய்பாவுக்கு சொந்தமான முரித்கேவில் உள்ள மார்கஸ் தொய்பா, பர்னாலாவில் உள்ள மார்கஸ் அஜில் ஹதித் முகாம், முசாபராபாத்தில் உள்ள ஷாவாய் நல்லா முகாம், ஹிஜாபுல் முஜாகிதீன் அமைப்பின் சியால்கேட்டில் உள்ளமெக்மூனா ஜோயா, கோட்லியில் உள்ள மாஸ்கர் ரஹீல் ஷாகித் உள்ளிட்டவை தாக்கி அழிக்கப்பட்டன.
இந்நிலையில் தான் சீனாவை நம்பி பாகிஸ்தான் கெட்டுப்போய் நம் நாட்டிடம் அடிவாங்கி உள்ளது தெரியவந்துள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இந்தியாவை ஒப்பிடும்போது சீனா, பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இருநாடுகள் இடையே வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் நல்ல உறவு இருக்கிறது. பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து தான் ராணுவ விமானங்கள், ராணுவ தளவாடங்கள் உள்பட பல பொருட்களை வாங்கி வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. நம் படைகள் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானை தாக்கலாம் என்ற சூழல் உருவானது.
குறிப்பாக ஏவுகணை, ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல்கள் வெளியாகின. அதுதான் இன்றைய தினம் நடந்துள்ளது. ஆனால் இதற்கு முன்பாக பாகிஸ்தான் நம் படையின் தாக்குதலை சமாளிக்க தயாராகி இருந்தது. பாகிஸ்தானின் நம் நாட்டின் ஏவுகணைகளை இடைமறித்து வானிலேயே அழிக்கும் ஏவுகணை தடுப்பு சிஸ்டம்களை தயாராக வைத்திருந்தது. குறிப்பாக எச்க்யூ - 9 ஏவுகணை தடுப்பு சிஸ்டமை தயாராக வைத்திருந்தது. இந்த எச்க்யூ - 9 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் என்பது சீனா தயாரிப்பாகும். ஆனால் இந்த ஏவுகணை தடுப்பு சிஸ்டமால் எதிரி நாடுகளின் ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழிக்க முடியும். இது ஒரு லாங்க் ரேஞ்ச் ஏர் டிபென்ஸ் சிஸ்டம். இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் ரஷ்யாவின் எஸ் 300 ஏர் டிபென்ஸ் சிஸ்டமுக்கு நிகரானது என்று சொல்வது உண்டு.
ஆனால் இன்று நம் ஏவுகணைகள் பாகிஸ்தானை தாக்கியபோது இந்த சீனாவின் தயாரிப்பான எச்க்யூ 9 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் என்பது செயல்படவில்லை. இது தான் பாகிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்தது. இதனை சாதகமாக பயன்படுத்தி நம் நாட்டின் ஏவுகணைகள் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை தரைமட்டமாக்கின. பொதுவாக சீனாவின் தயாரிப்பு மீது பல கேள்விகள் இருக்கும். சீனாவின் பொருட்கள் தரம் குறைவாகவும், ஆபத்து காலத்தில் கைக்கொடுக்காது எனவும் சொல்லப்படுவது உண்டு. அது பாகிஸ்தான் விஷயத்தில் சரியாக நடந்துள்ளது. இதன்மூலம் சீனாவை நம்பி பாகிஸ்தான் நம்மிடம் சம்மட்டி அடி வாங்கி உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications