அதிவேகத்தில் வளர்ச்சி அடைந்தாலும் குஜராத் மாடலை கிண்டலடிக்கும் அரசியல்வாதிகள்.. பிரதமர் மோடி வருத்தம்
ஜூனாகத்: குஜராத் மாநிலம் அதிவேகத்தில் வளர்ச்சி அடைந்தாலும் குஜராத் மாடலை அரசியல்வாதிகள் கிண்டலடிக்கின்றனர் என்று பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார்.
குஜராத்தின் ஜூனாகத்தில் ரூ.3580 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். ஜூனாகத்தின் இந்த திட்டங்கள், கடலோர நெடுஞ்சாலைகளை மேம்படுத்துதல், இரண்டு நீர் விநியோகத் திட்டங்கள், வேளாண் பொருட்களை இருப்பு வைப்பதற்கான கிடங்கு கட்டுமானம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
மாதவ்பூரில் ஸ்ரீ கிருஷ்ண ருக்மணி ஆலயத்தின் ஒட்டுமொத்த மேம்பாடு, கழிவுநீர் அகற்றுதல் மற்றும் குடிநீர் விநியோகத் திட்டங்கள், போர்பந்தர் மீன்பிடித் துறைமுகத்தின் தூர்வாரும் பணி பராமரிப்பு ஆகியவற்றுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கீர் சோம்நாத்தில் மத்வாட் மீன்பிடித் துறைமுக மேம்பாடு உள்ளிட்ட 2 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

அதிவேக வளர்ச்சியில் குஜராத்
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: மத்திய அரசில் பொறுப்புகளை ஏற்பதற்காக குஜராத்தில் இருந்து சென்றுவிட்டபோதும், அதே மாண்புகள் மற்றும் பாரம்பரியங்களுடன் குஜராத்தின் நலனுக்கு முதலமைச்சர் பூபேந்திர பட்டேலும் அவரது குழுவினரும் பணியாற்றுகின்றனர். குஜராத் தற்போது அதிவேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

குஜராத் துறைமுகங்கள்
குஜராத்தில் மிகப்பெரிய கடற்கரை இருக்கிறது. கடந்த கால அரசுகள் கடல்களை சுமை போல கருதின. அதன் தூய்மையான காற்றை விஷமாக்கின. அந்த காலம் மாறிவிட்டது. அதே கடல்கள் இப்போது நமது முயற்சிகளால் பயன்களை அறுவடை செய்கின்றன. இரட்டை என்ஜின் அரசு வளர்ச்சிப் பணிகளில் இரட்டை வேகத்தை கொண்டு வந்துள்ளது. இன்றைய தினமே 3 மீன்பிடித் துறைமுகங்களுக்கான பணிகள் தொடங்கியுள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் விவசாயிகளும் கால்நடை பராமரிப்புப் பணியாளர்களும் மீனவர் சமுதாயத்தினரும் விவசாயக் கடன் அட்டைகளை பெற்றுள்ளனர். இதனால், வங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கான நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 3.5 கோடி பேர் பயனடைகிறார்கள்.

புதிய விமான போக்குவரத்து
துறைமுகங்களுக்கான முன்முயற்சியை மட்டும் அரசு மேற்கொள்ளவில்லை, துறைமுகத்தை மையப்படுத்திய வளர்ச்சியையும் செயல்படுத்துகிறது . ஜூனாகத் தவிர புதிய கடலோர நெடுஞ்சாலை, போர்பந்தர், ஜாம் நகர், தேவ்பூமி துவாரகா, மார்பி ஆகிய மாவட்டங்களில் இருந்து மத்திய மற்றும் தெற்கு குஜராத் வழியாக செல்கிறது. இது குஜராத்தின் ஒட்டுமொத்த கடற்கரை பகுதியின் போக்குவரத்து தொடர்பை வலுப்படுத்தும். பல ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கெசோட் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் பறக்கத் தொடங்கின . இந்த விமான நிலையம் மேலும் மேம்படுத்தப்பட்டு சரக்குப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டால், இந்தப் பகுதியில் உற்பத்தியாகும் பழங்கள், காய்கறிகள், மீன் மற்றும் இதர பொருட்களை ஏற்றுமதி செய்வது எளிதாக இருக்கும்.

கிண்டலடிக்கப்படும் குஜராத் மாடல்
விண்வெளி, அறிவியல் மற்றும் விளையாட்டுத் துறைகளில் தேசம் சாதனைகளை புரிந்து வருகிறது. இருப்பினும், குஜராத் மற்றும் அதன் மக்களின் சாதனைகள் சிலரால் அரசியலாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. சில அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் நிலைப்பாட்டுக்காக குஜராத்தை குறைகூறுகின்றன. ஆனால் சர்தார் படேலின் ஒரே இந்தியா- உன்னத இந்தியா உணர்வையும், கனவுகளையும் நீர்த்துப் போக நாம் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications