அமைதி, பாதுகாப்புக்காக பாகிஸ்தான் பாடுபடுகிறது.. பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர்
இஸ்லாமாபாத்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் பாதுகாப்புக்காக என்றும் பாகிஸ்தான் பாடுபடுவதாக கூறிய ஷேக் தர், பாகிஸ்தான் என்றும் தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காது என்றும் பதிவிட்டுள்ளார்.

பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய பாதுகாப்பு படை தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதற்கு பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தியது.
அதேபோல் இந்திய ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வான் வெளியில் வைத்தே அழித்ததோடு, மறுபக்கம் பாகிஸ்தான் விமான தளங்கள் மற்றும் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. 4 நாட்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் இருந்து வந்த நிலையில், இன்று காலை முதலே அமைதி பேச்சுவார்த்தைக்கான வழிகள் தொடங்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் ராணுவ தளங்களை தாக்கியதே, அந்நாட்டு தலைவர்கள் அமைதி பேச்சுவார்த்தைக்கு வர காரணமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.. இரு நாடுகளும் சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. பாகிஸ்தான் எப்போதும் தனது இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது என்று பதிவிட்டார்.
இதன்பின் இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை இயக்குனர் இன்று பிற்பகல் 15:35 மணிக்கு இந்திய டிஜிஎம்ஓ-வை அழைத்தார். இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் நிலம், வான் மற்றும் கடலில் துப்பாக்கிச்சூடு மற்றும் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது என இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து மே 12 ஆம் தேதி மீண்டும் பேசப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications