இந்திய ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது.. பாக். போலீஸ் எஸ்.பி வாயிலிருந்தே வந்த உண்மை
இஸ்லாமாபாத்: இந்திய ராணுவத்தின் சர்ஜிக்கல் தாக்குதலால், பாகிஸ்தான் எல்லையில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதையும், இன்னும் பல தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில் வைத்திருப்பதையும், குறிப்பிட்டு, பாகிஸ்தானின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், தொலைபேசியில் பேசிய பேச்சு கசிந்துள்ளது.
கடந்த மாதம் 29ம் தேதி நள்ளிரவில் 12.30 மணி முதல் அதிகாலை 4.30 மணிக்குள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த இந்திய ராணுவம், அங்கு முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் கொன்று குவித்து திரும்பியது.
இந்த தாக்குதலை பாகிஸ்தான் மறுத்த போதிலும், எல்லையில் இந்திய ராணுவம் மீது தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் பற்றி காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் முதலானோர் சந்தேகம் வெளிப்படுத்தினர். தாக்குதலுக்கான வீடியோ ஆதாரம் கேட்டார் கேஜ்ரிவால்.
இந்நிலையில், சிஎன்என்-நியூஸ்18 டிவி சேனலில், பாகிஸ்தானின் மிர்பூர் ரேஞ்ச், போலீஸ் எஸ்.பி, குலாம் அக்பர், தொலைபேசியில் பேசிய பேச்சு ரகசியமாக பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. உயர் அதிகாரியிடம் பேசுவதாக நினைத்துக்கொண்டு, டிவி சேனலிடம் இந்த விவரங்களை வெளியிட்டார் அந்த போலீஸ் எஸ்.பி.
குலாம் அக்பர் கூறிய அந்த பரபரப்பு தகவல்கள் இதுதாதான்: சார்.., ராத்திரி நேரம் அது. சுமார் 3-4 மணி நேரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அனேகமாக அதிகாலை 2 மணியிலிருந்து 4 அல்லது 5 மணிவரை அந்த தாக்குதல் தொடர்ந்துள்ளது.
நமது ராணுவத்தை சேர்ந்த 5 வீரர்கள் அப்போது கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் நமது ராணுவத்திற்கு உடனே தெரியவில்லை. தகவல் தெரிந்ததும், ராணுவத்தினர் ஆம்புலன்ஸ்சுகளில் விரைந்து வந்து தீவிரவாதிகளின் உடலங்களை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்திவிட்டனர். இவ்வாறு அக்பர் கூறினார்.
அதிர்ச்சி தகவல் ஒன்றையும் அக்பர் அப்போது கூறினார். "இந்திய எல்லையில் ஈடுருவ செய்ய தீவிரவாதிகளை நமது ராணுவம் அழைத்து வந்துள்ளது சார். இனிமேல் அவர்கள் கையில்தான் உள்ளது" என்று தெரிவித்தார். எத்தனை தீவிரவாதிகள் ஊருடுவ தயாராக உள்ளனர் என்று கேட்டபோது, அது ராணுவத்திற்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அவர்கள் போலீசாரிடம் கூட சொல்வதில்லை என அந்த எஸ்.பி கூறியுள்ளார்.