இறங்கி வருகிறார் இம்ரான் கான்... நவாஸ் அரசுடன் பேச்சு.. போராட்டம் வாபஸாகுமா?
இஸ்லாமாபாத்: கடந்த ஒரு வாரமாக நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி, உச்சகட்டமாக தற்போது நாடாளுமன்றத்திற்கு முன்பு பல்லாயிரக்கணக்கானோருடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் சற்று இறங்கி வந்துள்ளார். முதல் முறையாக அரசுத் தரப்புடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் உள்ள மரியாட் ஹோட்டலில் வைத்து நடந்தது. அதில் இம்ரான் கட்சியின் பிரதிநிதிகளுடன், பாகிஸ்தான் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டு பேசினர். இன்று காலையும், பேச்சுவார்த்தை தொடரவுள்ளது.
இதுவரை ஷெரீப் விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்த இம்ரான் கான் தற்போது ஆறு அம்சக் கோரிக்கையை பாகிஸ்தான் அரசிடம் வைத்துள்ளார். அதுகுறித்து இன்று காலை பேசித் தீர்வு காணப்படும். அதன் பின்னர் இன்று பிற்பகலில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஷெரீப் பேசவுள்ளார்.

ஷெரீப் சகோதரர்கள் விலக வேண்டும்
பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் அவரது சகோதரர் பஞ்சாப் முதல்வர் ஷபாஷ் ஷெரீப் ஆகியோர் பதவி விலக வேண்டும்.

இடைக்கால அரசு தேவை
ஷெரீப் பதவி விலகிய பின்னர் இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும்.

மறு தேர்தல் வையுங்கள்
தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொண்ட பின்னர் நாடாளுமன்றத்திற்குப் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்.

சட்டசபைகளுக்கும் புது தேர்தல்
அதேபோல அனைத்து மாகாண சட்டசபைகளுக்கும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை
2013ல் நடந்த தேர்தலின்போது தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும். அந்தத் தேர்தலில் அரசு செய்த செலவுக் கணக்கை தணிக்கை செய்ய வேண்டும். இதுதான் இம்ரான் கான் வைத்துள்ள 6 கோரிக்கைகள்.

நெஞ்சு வலி வரும்.. வேணாம்
முன்னதாக நேற்று மாலை பிரதமர் வீட்டை முற்றுகையிடுவேன் என்று எச்சரித்திருந்தார் இம்ரான் கான். ஆனால் அதை அவர் செய்யவில்லை. இதுகுறித்து தனது ஆதரவாளர்களிடையே அவர் பேசுகையில், உங்களையெல்லாம் ஷெரீப் வீட்டை முற்றுகையிட கூட்டிச் செல்வேன் என்று கூறியிருந்தேன். ஆனால் ஏற்கனவே அவருக்கு இதயம் சரியில்லை. இப்போத உங்களை அங்கு கூட்டிச் சென்றால் அவருக்கு மாரடைப்பே வந்து விடும். அதை நான் விரும்பவில்லை என்றார் இம்ரான் கான்.

ராணுவம் தலையிட்டதால் இறங்கி வந்த இம்ரான்
முதலில் ஆவேசமாக போராடி வந்த இம்ரான் கான் தற்போது பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்திருப்பதற்கு ராணுவமே காரணம் என்று கூறப்படுகிறது. ராணுவம் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்துமாறு கூறியதைத் தொடர்ந்தே இம்ரான் கான் இறங்கி வந்துள்ளாராம்.

மதகுருவிடமும் பேச்சுவார்த்தை
இதேபோல இம்ரான் கானுடன் இணைந்து போராட்டம் நடத்தி வரும் மத குரு முகம்மது தாஹிர் அல் குவாத்ரியுடனும் அரசுத் தரப்பு பேசியுள்ளது. அவரும் தற்போது சற்று இறங்கி வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications