விண்ணை முட்டும் விலை.. "உணவு கொடுக்கவா? கொன்று விடவா?" பாகிஸ்தான் பெண் ஆவேசம்.. அடுத்த இலங்கையா?
இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டு பெண் ஒருவர் தன் குழந்தைக்கு ''உணவு கொடுக்கவா? அல்லது கொன்று விடவா? என அரசுக்கு கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிய நிலையில், தற்போது பாகிஸ்தான் நாடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
பொருளாதார வீழ்ச்சி ஒரு பக்கம் என்றால் வரலாறு காணாத கடன் சுமை ஒரு பக்கம் என இருபக்கமும் நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தத்தளித்து வருகிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஹமிதா பானு - பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
சிக்கன நடவடிக்கை
குறிப்பாக தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தானில், ஏராளமானோருக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சர்வதேச நிதியமான ஐ.எம்.ப்பிடம் பாகிஸ்தான் கடன் வாங்க முயன்றது. ஆனால் பிரான்ஸ் நாட்டின் நிதி கட்டுப்பாட்டு அமைப்பு கருப்பு பட்டியலுக்கு முந்தைய பட்டியலில் வைத்துள்ளது. இதனால் உலக நாடுகளின் நிதியுதவி கிடைக்காமல் பாகிஸ்தான் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. சிக்கன நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டு வருகிறது.
காட்சி மாறவில்லை
இம்ரான் கான் அரசு கவிழ்ந்த நிலையில், புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பார்களே அப்படித்தான் பாகிஸ்தானில் நிதி நெருக்கடிக்கு எந்த தீர்வு எட்ட முடியவில்லை. பாகிஸ்தானில் நடப்பு நிதியாண்டில் பற்றாக்குறை 17.4 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதனால், பணவீக்கம் ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. கடுமையான நிதி நெருக்கடியால் பாகிஸ்தானில் சில இடங்களில் போராட்டங்களும் வெடிப்பதாக சொல்லப்படுகிறது.
விண்ணை முட்டும் விலை
சர்வதேச நாணய நிதியத்திடம் பணத்தை பெற போராடி வரும் பாகிஸ்தான், இதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை தாஜா செய்யும் பணியில்(கெஞ்சுதல்) ஈடுபட்டு வருகிறது. அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்ததால் பல மாதங்களாக பாகிஸ்தான் பண மதிப்பிழப்பு குறைந்துள்ளது. இப்படி பல முனைகளிலும் நிதி நெருக்கடியால் தவிக்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டு மக்கள் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. மின்சாரம், மருந்து பொருட்கள், மளிகை பொருட்கள் என அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது.
சிரமத்தில் மக்கள்
ஒரு பக்கம் நிதி நெருக்கடி மற்றொரு புறம் அரசியல் குழப்பம் பாகிஸ்தானுக்கு இருபுறமும் நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் அரசு எதையுமே செய்யவில்லை என்று வேதனை தெரிவிக்கும் பாகிஸ்தான் மக்கள் தங்கள் கவலைகளையும் விலை வாசி உயர்வால் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் சமூக வலைத்தளங்களில் கொட்டி தீர்த்து வருகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பெண் பத்திரிகையாளர் ஹமித் மிர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
பிள்ளைகளுக்கு பால், மருந்து பொருட்களை எப்படி வாங்குவேன்
அந்த வீடியோவில் பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் விலைவாசி உயர்வை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் அரசை கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சுமார் 2 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் , "கராச்சியை சேர்ந்த ரபியா என்ற பெண் தனக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கண்ணீர் வடிக்கிறார். அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் உயர்ந்து விட்டது. நான் எப்படி எனது வீட்டு வாடகை செலுத்துவது? அதிகப்படியான மின் கட்டணத்தை எப்படி கட்டுவேன், எனது பிள்ளைகளுக்கு பால் மற்றும் மருந்து பொருட்களை எப்படி வாங்குவேன்?
உணவு கொடுக்கவா? கொன்று விடவா?
எனது பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க வேண்டுமா? அல்லது கொன்று விட வேண்டுமா?, ஏழை மக்களை ஏறத்தாழ பாகிஸ்தான் அரசு கொன்று விட்டது. இறைவன் உங்களை கேள்வி கேட்பான் என்ற அச்சம் உண்மையில் உங்களுக்கு உள்ளதா? என ஆவேசமாக ராபியா கேள்வி எழுப்பியுள்ளார். ரபியாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. அதில் ஒரு குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை. இதற்காக அந்த குழந்தைக்கு மருந்து மாத்திரைகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார். ஆனால் நான்கு மாதங்களில் மாத்திரைகளின் விலையும் அதிகரித்ததால் தனது வேதனையை தெரிவித்து இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிதி அமைச்சர் பதில்
ரபியா தனது வேதனையை வீடியோவாக வெளியிட்ட நிலையில், தற்போது அந்த வீடியோ பாகிஸ்தானில் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இவ்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் நிதி மந்திரி மிஃப்டா இஸ்மாயில், பாகிஸ்தான் அரசின் செயலை நியாயப்படுத்தும் வகையில் பேசினார். அவர் கூறுகையில், பாகிஸ்தான் அரசு மின் கட்டணத்தையோ, மருந்து பொருட்களின் விலையையோ உயர்த்தவில்லை என்றார். பாகிஸ்தான் நிதி அமைச்சரின் கருத்துக்கும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.