வாஜ்பாய் மறைவுக்கு பாகிஸ்தான் அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல்
இஸ்லாமாபாத்: வாஜ்பாய் மறைவுக்கு பாகிஸ்தான் அரசு மற்றும் அந்நாட்டு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த வாஜ்பாய் தனது 93 வயதில் காலமானார்.
வாஜ்பாயின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளும் வாஜ்பாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றன.

இம்ரான் கான் இரங்கல்
இந்நிலையில் வாஜ்பாயின் மறைவுக்கு பாகிஸ்தான் அரசும் அந்நாட்டு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான்கான் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், " இந்தியா - பாகிஸ்தான் இடையேயான நட்புறவை மேம்படுத்த வாஜ்பாய் மேற்கொண்ட நடவடிக்கைகள் எப்போதும் நினைவு கூரப்படும்" என்றார்.

துயருற்றோம்
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "வாஜ்பாய் இறந்த செய்தி அறிந்து நாங்கள் துயருற்றோம். இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு உறவில் மாற்றம் கொண்டு அளப்பரிய பங்கை வாஜ்பாய் ஆற்றினார்.

முஷாரப் இரங்கல்
வளர்ச்சிக்காக பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சார்க் ஒத்துழைப்புக்கு மிகவும் ஆர்வம் காட்டியவர் வாஜ்பாய். வாஜ்பாய் மறைவுக்கு பாகிஸ்தான் அரசும், மக்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பும் வாஜ்பாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

லாகூர் பேருந்து சேவை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீ லீக் -நவாஸ் கட்சியும், வாஜ்பாய் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், லாகூர் - டெல்லி இடையே 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பேருந்து சேவை துவங்கப்பட்டதையும் அக்கட்சி நினைவு கூர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications