காஷ்மீர் விவகாரம்.. கைவிட்ட அமெரிக்கா.. பஞ்சாயத்து கூட்ட பாகிஸ்தான் எங்கே போகிறது தெரியுமா?
Recommended Video
இஸ்லாமாபாத்: இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை அகற்றுவதற்கான மோடி அரசின் முடிவு உட்பட, ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் சமீபத்திய நகர்வுகள் குறித்து விவாதிக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) இன்று கூடுகிறது.
இந்த கூட்டம் இன்று சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் வைத்து நடைபெறும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் தெரிவித்தார்.
"ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் அரங்கேறியுள்ள கண்டிக்கத்தக்க சட்டவிரோத நடவடிக்கைகள்" பற்றி விவாதிக்க இந்த கூட்டம் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

கண்டனம்
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும், அம்மாநில அரசியல் தலைவர்களான உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி போன்றோர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனத்தை பதிவு செய்வதாகவும் கூறப்பட்டிருந்தது.

ஐநாவுக்கு கடிதம்
இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரின் நிலைமை பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கும் பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது. பாகிஸ்தான் அரசு வெளியிட்ட ஒரு ட்வீட்டில், "வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கு கடிதம் எழுதி, காஷ்மீரில் நிலவும் நெருக்கடியான நிலைமை குறித்து அவருக்கு விளக்கமளித்துள்ளார்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமைதி, அமைதி
ஐக்கிய நாடுகள் சபை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் அமைதி காக்க வலியுறுத்தியுள்ளது. ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் என்று, அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று தெரிவித்தார்.

பார்க்கிறோம்
"இந்த பிராந்தியத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலையை நாங்கள் கவலையுடன் கவனிக்கிறோம். அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று டுஜாரிக் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இதனிடையே, காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என அமெரிக்கா தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications