பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்புப் படை மோதல்.. 30 பேர் சுட்டுக்கொலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி (JAAC) அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்கள் வன்முறையாக மாறின. போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 200 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொருளாதார மற்றும் அரசியல் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்தி வந்த ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி (JAAC)-க்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இதற்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்தனர். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்கள் வெடித்தன. இதில், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.

இந்த மோதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் குண்டு பாய்ந்து 30 பேரும் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஒருவரின் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை முன்பு ஜேஏஏசி அமைப்பின் ஆதரவாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, போராட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் முயன்றபோது, போலீசாரை தானியங்கி துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்கியதாகவும், இதனால் இந்த மோதல் வெடித்ததாகவும் பாகிஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வரும் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ள பிராந்திய சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 45 இடங்களில் 12 இடங்கள் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications