கிரிக்கெட் வீரர் அப்ரிடியை தொடர்ந்து பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் கிலானிக்கு கொரோனா வைரஸ் உறுதி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.முன்னதாக அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இந்தியாவைப் போல் பாகிஸ்தானிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை அந்நாட்டில் 132405 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2551 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கிலானியின் மகன் காசிம் கிலானி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
67 வயதான கிலானி ஊழல் வழக்கு ஒன்றில் விசாரணைக்கு ஆஜராகினார். அதனை தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிலானியின் மகன் காசிம் கிலானி தனது டுவிட்டர் பக்கத்தில், "இம்ரான் அரசுக்கும், பாகிஸ்தானின் தேசிய பொறுப்புக்கூறல் கழகத்திற்கும் (NAB) நன்றி. நீங்கள் வெற்றிகரமாக எனது தந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே பாகிஸ்தான் நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், வியாழக்கிழமை முதல் எனக்கு கடுமையான உடல் வலி ஏற்பட்டது பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, விரைவில் குணமடைய வேண்டுங்கள் ரசிகர்களே" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications