பாகிஸ்தானில் பரபரப்பு.. இன்று பதவி விலகுகிறாரா பிரதமர் இம்ரான் கான்?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கான் இன்று பதவியிலிருந்து விலகுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அவரது கட்சியிலும் கூட்டணி கட்சிகளிலும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. இதன் காரணமாக விரைவில் அவர் பதவி விலகலாம் என்று கூறப்பட்டு வந்தது.
கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான், கடுமையான கடன் சுமை காரணமாக தள்ளாடி வருகிறது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடக்கிறது.

இம்ரான் கான் கட்சியின் பலம்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 342 எம்.பிக்கள் உள்ள நிலையில், ஆட்சியை தொடர 172 எம்.பிக்களின் ஆதரவு இம்ரான் கானுக்கு தேவை. ஆனால், கூட்டணிகளின் உதவியுடன் ஆட்சி செய்து வரும் இம்ரான் கானின் தெஜ்ரிக் கட்சிக்கு 155 எம்.பிக்கள் மட்டுமே உள்ளனர். மற்ற கட்சிகளை சேர்ந்த 23 எம்.பிக்களின் ஆதரவுடன் அவர் பிரதமராக பதவியேற்றார்.

சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு அலை
ஆனால், தற்போது கூட்டணி கட்சிகளும், தெஹ்ரிக் கட்சியை சேர்ந்த 24 எம்.பிக்களும் இம்ரான் கானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருப்பதால் அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெறுவது சந்தேகமே. இதுகுறித்து கருத்து தெரிவித்த இம்ரான் கான், கடைசி பந்து வரை நின்று ஆடுவேன் என்றார்.

இம்ரான் கான் எடுத்த முடிவு
இதனிடையே பாகிஸ்தான் ராணுவமும் இம்ரான் கான் மீதான ஆதரவை திரும்பப்பெற இருப்பதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தால் அதற்கு முன்னதாக தாமாகவே முன்வந்து பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரம்மாண்ட பேரணியில் ராஜினாமா
இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அவர் சார்ந்த தெஹ்ரிக் கட்சி சார்பில் இன்று நீதியுடன் நிற்போம் என்ற பெயரில் பிரம்மாண்ட பேரணி நடைபெற உள்ளது. கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ நடைபெறும் அந்த பேரணியில் தனது ராஜினாமாவை அவர் அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் கைதாகும் வாய்ப்பு
இதனை தொடர்ந்து 349 வெளிநாட்டு நபர்களிடமும், 88 தனிநபர்களிடமும் சட்டவிரோதமாக 73.22 லட்சம் அமெரிக்க டாலர்களை நிதியாக பெற்ற வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளிவந்து தெஹ்ரிக் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications