பாகிஸ்தானை விட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேற தலிபான்கள் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை விட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேற வேண்டும் இல்லையெனில் வன்முறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தலிபான்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில்தான் அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகள் முகாமிட்டிருக்கின்றனர். இந்த அமைப்புகள்தான் பாகிஸ்தான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
அண்மையில் கராச்சி விமான நிலையம் மீது மிகப் பெரும் தாக்குதலை நடத்தியிருந்தனர் தீவிரவாதிகள். இதற்கு பதிலடியாக தலிபான்களுக்கு எதிராக மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கையை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டுள்ளது.
இத்தாக்குதலில் நேற்று ஒரே நாளில்100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஷகிதுல்லா ஷாகித் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பாகிஸ்தானில் முதலீடு செய்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், பன்னாட்டு அமைப்புகள் அனைத்துமே உடனே தங்களது நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு அவர்களே பொறுப்பு என்று கூறியுள்ளார்.
மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைக்கு எதிராக அந்நாட்டு அரசுக்கும் தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். "முஜாஹிதீன்களின் பதிலடியால் ஒரு மோசமான வரலாற்று எச்சரிக்கை உங்களுக்கு கிடைக்கும். உங்களது இஸ்லாமாபாத், லாகூர் மாளிகைகள் பற்றி எரியும்" என்று அவர் எச்சரித்துள்ளார்.