அடி வாங்கியும் அடங்காத பாகிஸ்தான்.. நூர் கான் விமான தளத்தில் செய்யும் காரியம்! வெளியான தகவல்
இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் மோதல் இருந்த போது, இந்தியா சில முக்கியமான தாக்குதல்களை நடத்தியிருந்தது. அப்படித் தான் பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் உள்ள நூர் கான் விமானத் தளத்தை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கிடையே அந்த விமானப்படைத் தளம் குறித்தும் அங்கு பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்தும் இப்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டிருந்தது. அதாவது பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் தேவையில்லாமல் அத்துமீறி இந்தியாவைத் தாக்கியது. அப்போது இந்தியா பாகிஸ்தான் இடையே சில நாட்கள் வரை மோதல் மாறி மாறி நடந்தது.

நூர் கான் விமானத் தளத் தாக்குதல்
இதற்கிடையே நூர் கான் விமான தளம் குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது நூர் கான் விமானத் தளத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகளை பாகிஸ்தான் ஆரம்பித்துள்ளதாம். அங்கு எடுக்கப்பட்ட சாட்டிலைட் போட்டோக்கள் மூலம் இதை உறுதி செய்ய முடிவதாகப் பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 25 கி.மீ.க்கும் தூரத்தில் அமைந்துள்ள நூர் கான் விமானப்படைத் தளம்.. பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய தளமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த மே 10ம் தேதி இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் நூர் கான் விமானப்படைத் தளத்தின் ட்ரக்குகளும், தளமும் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் ட்ரோன் கண்ட்ரோல் சென்டராக அறியப்படும் இந்தத் தளத்தையே இந்தியா முடக்கியது..
இந்தியா அதிரடி
எந்த வகையான ஆயுதங்களை இந்தியா பயன்படுத்தியது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. ஆனால், பிரம்மோஸ் அல்லது ஸ்கால்ப் வான்வழி ஏவுகணைகளை இந்தியா பயன்படுத்த இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இந்திய விமானப்படையின் எஸ்யூ-30 ரக போர் விமானங்களில் இருந்து பிரம்மோஸும், ரஃபேல் போர் விமானங்களில் இருந்து ஸ்கால்ப் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தியா நடத்திய தாக்குதலில் அங்கிருந்த இரு ஓடுதளங்களும் அழிக்கப்பட்டன. மேலும், அருகிலுள்ள கட்டிடங்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டன. அப்போது எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்களில் இது தெளிவாகத் தெரிந்தது. இதற்கிடையே இந்தியாவின் தாக்குதலால் சேதமடைந்த பகுதிகளை பாகிஸ்தான் மீண்டும் சரி செய்யத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான சாட்டலைட் போட்டோக்களும் வெளியாகியுள்ளன.
மீண்டும் பாகிஸ்தான் செய்யும் காரியம்
மே 10ம் தேதி தாக்குதல் நடந்த நிலையில், மே 17ம் தேதி இந்தத் தளம் சுத்தம் செய்யப்பட்டது. இதற்கிடையே நேற்று செப்டம்பர் 3ம் தேதி எடுக்கப்பட்ட சாட்டிலைட் போட்டோவில் அங்குப் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவது தெரிகிறது. புதிய சுற்றுச் சுவர் உட்பட பல கட்டுமானங்கள் நடப்பது தெரிகிறது.
இது தொடர்பாக வல்லுநர் டேமியன் சைமன் கூறுகையில், "இந்தியா திட்டமிட்டு இந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தி இருந்தது. இதில் பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது. பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்திற்கு மிக அருகே அமைந்துள்ள தளத்தை இந்தியா துல்லியமாகத் தாக்கியிருந்தது. ஆனால், இப்போது எடுக்கப்படும் சாட்டிலைட் படங்களில் அங்கு மீண்டும் கட்டுமானம் நடப்பது தெரிகிறது. இங்குப் பாதிப்புகள் மிக மோசமாக இல்லை என்பதால் பெரியளவில் சீரமைப்பு பணிகள் தேவைப்படாது" என்றார்.
பஹல்காம் தாக்குதல்
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய இந்தத் தாக்குதல் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் இந்திய விமானப்படையின் துணைத் தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அதாவது பஹல்காம் தாக்குதல் நடந்து இரு நாட்களில் பாகிஸ்தானில் உள்ள எந்தத் தீவிரவாத முகாம்களைத் தாக்கலாம் என்ற லிஸ்டை மத்திய அரசுக்கு விமானப் படை கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்..
ஏப்ரல் 29ம் தேதி எங்குத் தாக்குதல் நடத்தலாம் என்று இடங்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. மே 6ல் தாக்குதலின் தேதி மற்றும் நேரம் இறுதி செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து மே 7ம் தேதி பாகிஸ்தான் மீதான தாக்குதலை இந்தியா ஆரம்பித்தது. பாகிஸ்தானில் 200 கி.மீ. வரை சென்று தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்திருந்தது.












Click it and Unblock the Notifications