பெட்ரோல், டீசல் விலையை இரட்டிப்பாக்க போறோம்.. அறிவித்த வங்கதேச அரசு.. பங்குகளில் குவிந்த மக்கள்!
டாக்கா: வங்காள தேசத்தில் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 52 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் விலை அமலுக்கு வரும் முன்பே வாங்கிவிட வேண்டும் என பெட்ரோல் பங்க்குகளுக்கு படையெடுத்துள்ளனர்.
உக்ரைன் - ரஷ்யா போர் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திஉள்ளது. உக்ரைன் நாடு மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதன் காரணமாக இயற்கை எரிவாயு ஏற்றுமதி, எண்ணெய் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.
உக்ரைனில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவிற்கு கொடுக்கும் பதிலடி நடவடிக்கையாக அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் இந்த நடவடிக்கையை எடுத்தன.

வங்காள தேசத்தில் நிதிச்சுமை
இதனால், ஐரோப்பிய நாடுகளும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த நாடுகளும் குளிக்கும் நேரத்தை குறைத்தும், இரவு நேரங்களில் விளக்குகளை அணைத்தும் சிக்கன நடவடிகையை மேற்கொண்டுள்ளனர். சர்வதேச அளவில் கேஸ், எண்ணெய் விலைகள் கடுமையான விலையேற்றத்தை சந்தித்துள்ளது. இந்த கடும் விலையேற்றம் காரணமாக வங்காளதேசமும் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPC) கடும் நிதிச்சுமையை எதிர்கொண்டுள்ளது. குறைந்த விலையில் எரிபொருளை விற்றதன் மூலம் சுமார் 8 ஆயிரம் கோடி டாகா (வங்காளதேச பண மதிப்பு) நஷ்டத்தை சந்தித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

51.17 சதவீதம் உயர்வு
இதையடுத்து, இந்த நிதிச்சுமையை ஈடு கட்டும் வகையில், பெட்ரோலிய பொருட்களின் விலை 51.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. வங்காளதேசம் சுதந்திரம் பெற்ற 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த அளவு விலை உயர்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். ஆக்டேன் பெட்ரோல் விலை 89 டாக்காவில் இருந்து 135 டாக்கா- வாக உயர்ந்துள்ளது. இது 51.7 சதவீத விலை உயர்வு ஆகும். மேலும், டீசல் விலையும் 51.2 சதவீதம் உயர்ந்து 130 டாக்காவாக ஒரு லிட்டர் விற்பனையாகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கிட்டதட்ட 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திணறிய பெட்ரோல் நிலையங்கள்
இந்த விலை உயர்வு அறிவிப்பு வந்ததும் அதிர்ச்சி அடைந்த வங்காளதேச மக்கள், விலை உயர்வுக்கு கண்டனங்கள் தெரிவித்தன. போராட்டம் ஒருபுறம் நடந்தாலும், நாளை முதல் அமலுக்கு வந்துவிட்டால் விலை அதிகமாக கொடுத்த வாங்க வேண்டியிருக்கும் என்ற நினைப்புடன், பொதுமக்கள் பலர் விலையேற்றம் அமலுக்கு வரும் முன்பாக தங்கள் வாகனங்களின் டேங்கை நிரப்பி விட வேண்டும் என்ற ஆசையில் பெட்ரோல் நிலையங்கள் முன்பாக திரண்டனர். இரவு நேரம் என்றாலும் கட்டுக்கடங்காமல் கூட்டம் திரண்டது. இதனால் சாலைகளில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதை பார்க்க முடிந்தது.

விலை உயர்வை கண்டித்து போராட்டம்
மேலும் இது தொடர்பான காட்சிகள் உள்ளூர் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவின. கட்டுக்கடங்காத கூட்டத்தை கண்டு திணறிய பல பெட்ரோல் நிலையங்கள், தங்கள் சேவையை உடனடியாக நிறுத்தின. இதையடுத்து நள்ளிரவு விலையேற்றத்திற்கு பிறகு மீண்டும் தனது சேவையை பெட்ரோல் நிலையங்கள் தொடங்கியதாக கூறப்படுகிறது. திடீர் விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்த மக்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டதையும் காண முடிந்தது. பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். இலங்கையை தொடர்ந்து இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான வங்காளதேசத்திலும் தற்போது போராட்டங்கள் வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications