சாலையில் தலைகுப்புற விழுந்த விமானம்! அடுத்த நொடி கிளம்பிய தீப்பிழம்பு! பரிதாபமாக பறிபோன உயிர்! ஷாக்
ரோம்: இத்தாலியில் உள்ள முக்கிய நகரம் ஒன்றில் சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. நன்றாகப் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிகிறது. இதனால் தலைக்குப்புற அந்த விமானம் சாலை ஒன்றில் மோதி விபத்தில் சிக்கியது. அந்தக் கொடூர விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.
கடந்த மாதம் இந்தியாவில் நடந்த ஏர் இந்தியா விபத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டார்கள். அதைத் தொடர்ந்து உலகெங்கும் நடக்கும் விமான விபத்துகள் குறித்த செய்திகள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. அப்படியொரு விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் பகீர் கிளப்பி இருக்கிறது.

இருவர் உயிரிழப்பு
இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள ப்ரெஷியா நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. அங்குச் சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மிலனைச் சேர்ந்த 75 வயதான வழக்கறிஞர் செர்ஜியோ ரவாக்லியா மற்றும் அவரது 60 வயதுடைய தோழி ஆன் மரியா டி ஸ்டெஃபானோ என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
75 வயதான செர்ஜியோ ரவாக்லியா தான் விபத்திற்குள்ளான விமானத்தை ஓட்டியுள்ளார். ஃப்ரீசியா ஆர்.ஜி. மாடல் இலகுரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கரும்புகை சூழ்ந்த நிலையில், சாலை முழுக்க தீப்பற்றி எரிந்தது. இதற்கிடையே விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஷாக் வீடியோ
அன்றைய தினம் அங்குப் போக்குவரத்து நார்மலாகவே இருந்துள்ளது. எல்லாம் வழக்கம் போல இருந்தபோது, திடீரென எங்கிருந்தோ வந்த அந்த விமானம் சாலையில் தலைகுப்புற விழுகிறது. விமானம் தரையில் மோதிய அடுத்த நொடி அது வெடித்துச் சிதறுகிறது. இவை அனைத்தும் ஒரே நொடியில் நடந்துவிட்டது. இதனால் அருகே சென்ற கார்களால் தக்க நேரத்தில் நிறுத்த முடியவில்லை. சில கார்கள் விமான விபத்தால் ஏற்பட்ட தீயைத் தாண்டிச் செல்வதையும் பார்க்க முடிகிறது.
விமானத்தில் திடீரெனக் கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் இதனால் விமானத்தை அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறக்க செர்ஜியா முயன்றிருப்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்படி அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்து, அது சுழன்று விபத்துக்குள்ளானது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
விசாரணை
இந்த விபத்தில் இரண்டு வாகன ஓட்டிகள் காயமடைந்தனர், ஆனால் அவர்கள் உயிர் தப்பினர். விபத்து நடந்த இடத்தில் எரிந்த நிலையில் உடைந்த பாகங்கள் சிதறிக் கிடந்தன. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் மீட்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருப்பினும், அதற்குள் விமானம் தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது.
விபத்தில் சிக்கிய ஃப்ரீசியா ஆர்.ஜி. ரக விமானம் கார்பன் ஃபைபரால் செய்யப்பட்ட இத்தாலிய இலகுரக விமானம் ஆகும். இதன் இறக்கைகள் சுமார் 30 அடி நீளம் கொண்டவை. இந்த விபத்து குறித்து விசாரணையை இத்தாலியின் தேசிய விமானப் பாதுகாப்பு அமைப்பு தொடங்கியுள்ளது. விமானத்தின் பராமரிப்பு விவரங்கள் மற்றும் இயந்திரத்தின் நிலை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளன.
விமான விபத்துகள்
விமானங்கள் பொதுவாகவே பாதுகாப்பானவை தான். கார், பஸ், அவ்வளவு ஏன் ரயில்களை விட விமானங்களில் உயிரிழப்புகள் குறைவாகவே ஏற்படுகிறது. இருப்பினும், விமான விபத்துகள் பொதுவாகப் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் அவை பரபரப்பைக் கிளப்புவதாகவே இருக்கிறது. மேலும், சிறு விமான விபத்து நடந்தாலும் அது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு, மீண்டும் அதுபோன்ற தவறுகள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications