பாரதம் உங்களால் பெருமை அடைகிறது.. அமீரகத்தில் இந்தியர்கள் மத்தியில் உற்சாகமாக பேசிய பிரதமர் மோடி
அபுதாபி: அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர் 65 ஆயிரம் பேர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பாரதம் உங்களால் பெருமை அடைகிறது என்று பேசினார்.
இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே நீண்ட காலமாக நட்புறவு உள்ளது. இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் பல்வேறு ஒப்பந்தங்களும் அமலில் உள்ளது. இந்த நிலையில் தான், பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று ஐக்கிய அமீரகம் புறப்பட்டு சென்றார். ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரக அதிபரை சந்தித்து பேசினார்.

இன்று மாலை அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர் 65 ஆயிரம் பேர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதவது:- நீங்கள் என் மீது காட்டிய அன்பு அபரிமிதமானது, எனக்காக நேரம் செலவிட்டு இங்கு வந்துள்ளீர்கள். 140 கோடி சகோதர சகோதிரிகளின் செய்தியுடன் நான் இங்கே வந்து இருக்கிறேன். பாரதம் உங்களால் பெருமை அடைகிறது என்பதே அந்த செய்தி.
இந்தியாவின் மூன்றாவது பெரிய கூட்டாளியாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. இந்தியாவுக்கும் அமீரகத்துக்கும் இடையேயான கூட்டுறவு மேலும் வலுவடைந்து வருகிறது. தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் இரு நாடுகளின் கூட்டுறவு வலுவாக இருக்கிறது. சமூக கலாசார உறவுகளில் இந்தியாவும் அமீரகமும் சாதித்தது உலகிற்கு முன்மாதிரியாக உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் யுபிஐ சேவை பயன்பாட்டுக்கு வரும். இந்த வசதி பரிவர்த்தனையை மேலும் எளிதாக்கும். உங்கள் குடும்பத்தினருக்கு எந்த தடங்கலும் இன்றி நீங்கள் பணம் அனுப்பலாம். இந்தியாவின் ஆற்றல் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது 3-வது ஆட்சி காலத்தில் இந்தியாவை 3-வது பெரிய பொருளாதாரமாக மாற்ற திட்டமிட்டுள்ளேன். இந்தியா அதிவேகமாக மாறியிருப்பதை சமீபத்தில் இந்தியா சென்றவர்கள் பார்த்திருக்க முடியும்.
இந்தியாவை 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக்குவதான் ஒவ்வொரு இந்தியனின் இலக்காக இன்று உள்ளது. உலக அளவில் யாருடைய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது.. உங்கள் பாரத் தான் வேகமாக வளர்கிறது. உலகின் பால் உற்பத்தி அதிகம் செய்யும் நாடு நமது பாரதம். உலகில் 2-வது மிகப்பெரிய உற்பத்தி நாடும் நமது பாரதம் தான். முதல் முயற்சியிலேயே நிலவை தொட்டதும் நமது பாரத் தான். நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடும் இந்தியா தான். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications