உலகின் பழமையான மொழி தமிழ்- பிரான்சில் திருவள்ளுவர் சிலை- பலத்த கரவொலிக்கு இடையே அறிவித்த மோடி!
பாரீஸ்: உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி என்றும் பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்றும் பலத்த கரவொலிக்கு இடையே பாரீஸ் நகரில் இந்தியர்களிடையே உரையாற்றுகையில் பிரதமர் மோடி அறிவித்தார்.
பிரான்ஸ் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பாரீஸ் நகரில் இந்தியர்களிடையே பேசியதாவது: வெளிநாட்டில் பாரத் மாதா கீ ஜே என்கிற முழக்கத்தைக் கேட்கும்போது, நான் சொந்த மண்ணில் நிற்பதைப் போல உணர்கிறேன். நான் பலமுறை பிரான்ஸ் வருகை தந்துள்ளேன். ஆனால் இம்முறை எனது வருகை சிறப்பானது. இப்போது பிரான்சின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. பிரான்ஸ் மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை அழைத்த பிரான்ஸ் மக்களுக்கு நன்றி. இது இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான பிரிக்க முடியாத நட்புறவின் பிரதிபலிப்பாகும்.

உலக ஒழுங்கு மாற்றம்: இன்று உலகம் புதிய ஒழுங்கை நோக்கி நகர்கிறது. இதில் இந்தியாவின் பங்கும் கூட மிக வேகமாக மாறி வருகிறது. இந்தியா தற்போது G20 கூட்டமைப்பின் தலைமைத்துவ பாத்திரம் வகிக்கிறது. இந்தியாவில் சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டன் பணி தொடங்கி இருக்கிறது. இன்னும் சில மணிநேரங்களில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்த இருக்கிறோம். பருவநிலை மாற்றம், தீவிரவாதம் அல்லது தீவிரவாத எதிர்ப்பு என எதுவாக இருந்தாலும், உலகம் இந்தியாவையே உற்றுப் பார்க்கிறது. எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நாம் நழுவ விடமாட்டோம், ஒவ்வொரு நேரத்தையும் வீணாக விடமாட்டோம் என்று இந்தியா தீர்மானித்துள்ளது. எனது ஒவ்வொரு நொடியும் நமது நாட்டு மக்களுக்கானது என்று தீர்மானித்துள்ளேன்.
#WATCH | Tamil is the oldest language in the world. What could be a matter of bigger pride that the world's oldest language is Indian: PM Narendra Modi, in Paris pic.twitter.com/zjlvQ5MJfv
— ANI (@ANI) July 13, 2023
யுபிஐ வசதி: அடுத்த 25 ஆண்டுகளில் ஒரு வளர்ந்த நாடாக மாறும் நோக்கில் இந்தியா செயல்படுகிறது. இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான இடம் இருக்கிறது என்று சர்வதேச நிறுவனங்கள் கூறுகின்றன. .இந்தியாவில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் நீண்ட கால படிப்புக்கு பிந்தைய விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியர்கள் இனி பிரான்சில் UPI பேமெண்ட் முறையைப் பயன்படுத்தி இந்திய ரூபாயில் பணம் செலுத்தலாம். பிரான்சில் UPIஐப் பயன்படுத்த இந்தியாவும் பிரான்சும் ஒப்புக் கொண்டுள்ளன. இனி ஈபிள் கோபுரத்தில் இருந்து இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்திய ரூபாய்களில் கட்டணங்களை செலுத்த முடியும்.

தமிழ் பெருமை, திருவள்ளுவர் சிலை: ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், 10 முதல் 15 ஆண்டுகளில் 42 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டில் இருந்து மேலே கொண்டுவரப்பட்டுள்ளனர் என கூறியிருக்கிறது. இந்த எண்ணிக்கை ஐரோப்பாவின் மக்கள்தொகையை விட அதிகம், அமெரிக்காவின் மக்கள்தொகையை விட அதிகம். உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் மிகப் பழமையான மொழி இந்திய மொழி என்பதில் மிகப் பெரிய பெருமை எமக்கு உண்டு. பிரான்ஸ் நாட்டில் இந்தியாவின் சார்பாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும். பிரான்ஸில் திருவள்ளுவர் சிலையை அமைப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை. 100 ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்சுக்கான யுத்தத்தில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். பிரெஞ்சு மண்ணில் நிகழ்ந்த யுத்தத்தில் பங்கேற்று பிரெஞ்சு மண்ணில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இங்கு நடந்த போரில் பங்கேற்ற படைப்பிரிவுகளில் ஒன்றான பஞ்சாப் ரெஜிமென்ட் பிரான்ஸின் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications