பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நெகிழ்ச்சி!
டெல் அவிவ்: பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நேற்று அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். இதனையடுத்து அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'கினெசெட்' எனும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மோடி இஸ்ரேலுக்கு சென்றிருக்கிறார். இந்தியாவுக்கும்-இஸ்ரேலுக்கும் இடையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒத்துழைப்பு கிடையாது. பாலஸ்தீனம், ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன்தான் முன்னாள் பிரதமர்கள் நட்பு பாராட்டி வந்திருந்தார்கள். இப்படி இருக்கையில் இஸ்ரேலுடன் மோடி நெருக்கம் காட்டுவது, இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளின் தன்மை மாறியிருக்கிறதோ என கேள்வி எழுந்திருக்கிறது.

மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் 2வது முறையாக இஸ்ரேல் சென்றிருக்கிறார். முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பாலஸ்தீன நாட்டின் கிராண்ட் காலர் விருது வழங்கப்பட்டிருந்தது. வெளிநாட்டுத் தலைவர்களுக்கு பாலஸ்தீனம் வழங்கும் மிக உயரிய விருது இது.
நேற்று இஸ்ரேல் சென்ற மோடி, அந்நாட்டு நாடாளுமன்றக் கட்டிடமான கெனெசட்டில் உரையாற்றினார். இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான முக்கிய உறவுகளை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய சிறந்த பணிக்காக, அவருக்கு 'கெனெசட் சபாநாயகர் பதக்கம்' வழங்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அமீர் ஓஹானா இந்த உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார். கெனெசட்டின் மிக உயர்ந்த கௌரவமான இந்த பதக்கத்தைப் பெறும் முதல் உலகத் தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த மோடியின் தனிப்பட்ட தலைமையையும், அசாதாரண பங்களிப்பையும் இந்த விருது போற்றுகிறது. உலகத் தலைவர்களில் மிகச் சிலரே இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளின் உயரிய விருதுகளையும் பெற்றுள்ளனர். அந்தச் சில அரிய தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications