நேபாளம்: புத்தர் பிறந்த பூமியில் சீனா ஆட்டத்துக்கு பதிலடி- லும்பினியில் களமிறங்கிய பிரதமர் மோடி
லும்பினி: புத்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் பிறந்த இடமான நேபாளத்தின் லும்பினியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இதே லும்பினியை முன்வைத்து சீனா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நிலையில் பிரதமர் மோடியின் தற்போதைய பயணம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவை சுற்றிய அனைத்து நாடுகளிலும் சீனா மூக்கை நுழைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. இந்தியாவுக்கு போட்டியாக அண்டை நாடுகளை தம் பக்கம் வளைப்பதில் சீனா குறியாகவும் இருக்கிறது. பவுத்த மதத்தைப் பின்பற்றும் நாடுகளை சீனா இலகுவாக தம் பக்கம் வளைத்து வருகிறது. இந்த பட்டியலில் நேபாளமும் ஒன்று. குறிப்பாக நேபாளத்தில் புத்தர் பிறந்த இடமான லும்பினியின் மேம்பாடு என்ற அடிப்படையில் பல்வேறு செயல் திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது.
Recommended Video

லும்பினியில் மோடி
இதற்கு பதிலடி தரும் வகையில் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இன்று லும்பினி பயணம் மேற்கொண்டார். லும்பினியில் நேபாள நாட்டின் பிரதமர் ஷேர் பகதூர் தூபா, அவரது துணைவியார் டாக்டர் அர்சு ராணா தூபா மற்றும் நேபாள அரசின் பல்வேறு அமைச்சர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பிரதமர் மோடி 5-வது முறையாக நேபாளத்துக்கும் முதல் முறையாக லும்பினிக்கும் சென்றுள்ளார்.

மாயாதேவி கோவில்
பின்னர் லும்பினியில் உள்ள மாயாதேவி ஆலயத்திற்குப் பயணம் செய்தார் பிரதமர் மோடி. அக்கோவில் வளாகத்தின் உட்பகுதியில் உள்ள குறியீட்டுக் கல்லுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இது புத்தரின் மிகச்சரியான பிறப்பிடம் என்பதைச் சுட்டிக்காட்டுவதாகும். புத்த சமய முறைகளின்படி நடைபெற்ற பூஜையில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அசோகர் நிறுவிய தூண்
மாயாதேவி ஆலயத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள அசோகர் ஸ்தூபி அருகே இரு நாட்டு பிரதமர்களும் விளக்குகள் ஏற்றிவைத்தனர். இந்தத் தூண் கி.மு. 249-ல் அசோக சக்கரவர்த்தியால் நிறுவப்பட்டது. புத்தரின் பிறப்பிடம் என்பதற்கான முதல் கல்வெட்டு ஆதாரமாக லும்பினியில் இது உள்ளது. இதன்பிறகு புத்தகயாவில் இருந்து கொண்டுவரப்பட்டு 2014-ல் லும்பினிக்குப் பிரதமர் மோடியால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட போதி மரக்கன்றுக்கு இரு நாட்டு பிரதமர்களும் நீர் வார்த்தனர். பின்னர் அந்த ஆலயத்தின் வருகையாளர் பதிவேட்டிலும் இருநாட்டு பிரதமரும் கையெழுத்திட்டனர்.

புத்த கலாசார மையம்
லும்பினி மடாலய மண்டலத்தில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான இந்திய சர்வதேச மையத்தை கட்டமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். கடந்த மார்ச் மாதம் சர்வதேச புத்த கூட்டமைப்பிற்கும் லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளைக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில், லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளை, சர்வதேச புத்த கூட்டமைப்பிற்கு ஒதுக்கியுள்ள இடத்தில், டெல்லியின் சர்வதேச புத்த கூட்டமைப்பால் இந்த மையம் அமைக்கப்படும். தேராவாடா, மஹாயானா மற்றும் வஜ்ராயானா ஆகிய மூன்று முக்கிய புத்த பாரம்பரியங்களைச் சேர்ந்து துறவிகளால் பூமிபூஜை மேற்கொள்ளப்பட்ட பிறகு, மையத்தின் மாதிரியை இரு நாடுகளின் பிரதமர்களும் திறந்து வைத்தனர்.
புத்த ஆன்மீக அம்சங்களை உலகம் முழுவதும் உள்ள யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும் பெறுவதற்குத் தேவையான உலகத்தரம் வாய்ந்த வசதிகளை, கட்டி முடிக்கப்பட்ட பிறகு, இந்த மையம் வழங்கும். நவீன கட்டிடமாக, எரிசக்தி, தண்ணீர் மற்றும் கழிவுகளைக் கையாள்வதில் நிகர பூஜ்ஜிய தன்மை வாய்ந்ததாக விளங்குவதுடன், பிரார்த்தனை அரங்குகள், தியான மையங்கள், நூலகம், கண்காட்சி அரங்கம், உணவகம், அலுவலகம் மற்றும் இதர வசதிகளையும் இந்த மையம் உள்ளடக்கியிருக்கும்.












Click it and Unblock the Notifications