அமெரிக்காவுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றுவதில் பெருமை - பிரதமர் மோடி
வாஷிங்டன்: அமெரிக்காவும் இந்தியாவும் தோளோடு தோள் நின்று இணைந்து பணியாற்றுவதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மோடி வெள்ளை மாளிகை சென்றடைந்தார். அங்கு அதிபர் ஒபாமாவை சந்தி்த்த மோடி இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவுகள் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவுகள், பாதுகாப்பு, அணுசக்தி ஒத்துழைப்பு, இணையதள குற்றங்களை தடுப்பது, மின்சக்தி உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்பட்டன.

பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி கூறியதாவது: இருநாட்டு பாதுகாப்பு, அணுசக்தி ஒத்துழைப்பு, சைபர் குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசினோம். அமெரிக்காவுடன் தோளோடு தோள் நின்று இணைந்து பணியாற்றுவதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம்.
இந்தியாவில் 35 வயதுக்குள் 80 கோடி இளைஞர்கள் உள்ளனர். 80 கோடி இளைஞர்கள் அமெரிக்காவுடன் இணைந்து மனித சமூகத்துக்கு சேவையாற்ற உள்ளனர். இணையதள குற்றங்களை தடுப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயலாற்றும். ஜி 20 மாநாட்டில் நாங்கள் மீண்டும் சந்திக்க உள்ளோம். அந்த சந்திப்பில் பருவநிலை மாற்றம் தொடர்பான முடிவுகளை பேச உள்ளோம்.
என்.எஸ்.ஜி. குழுவில் இந்தியா பங்கு பெற அமெரிக்க அளிக்கும் ஆதரவுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது எனவும் பிரதமர் மோடி கூறினார்.
இந்த சந்திப்பு குறித்து அதிபர் ஒபாமா கூறுகையில், பிரதமர் மோடியை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த சந்திப்பின் போது நான் இந்திய குடியரசு தினவிழாவில் கலந்து கொண்டது என் நினைவிற்கு வருகிறது. பிராந்திய பாதுகாப்பு குறித்து இணைந்து பணியாற்றுவது பற்றி விவாதித்தோம். அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கிய பிணைப்புடன் உள்ளோம் என்றார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications